புதுடெல்லி: உலகளவில் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா வரும் காலங்களிலும் நீடிக்கும் என அமெரிக்காவைச் சேர்ந்த மார்கன் ஸ்டான்லி நிறுவனம் பொருளாதாரம் குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மார்கன் ஸ்டான்லி (Morgan stanley) என்ற புகழ்பெற்ற நிறுவனம் உலக நாடுகளின் பொருளாதாரம் குறித்து ஆய்வறிக்கை வெளியிடுவது வழக்கம். இது மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகும். இந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை தங்களின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்காக அதிக தொகையை செலவிட்டு வருகின்றன. ஆனால் அது பலனளிக்கவில்லை. மேலும் சர்வதேச பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே இருக்கிறது.
பரஸ்பர வரி விதிப்பு(Reciprocity tax) என்ற பெயரில் அமெரிக்க அரசு மற்ற நாடுகளின் மீது வர்த்தக வரிகளை விதித்துள்ளது. இதன் எதிரொலியாக கடந்த ஏப்ரலில் அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்ததுடன் உலகம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. மேலும் நடப்பாண்டில் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி என்பது 1.5% இருக்கும். இது மேலும் குறைந்து 2026-ம் ஆண்டு 1% சரிவடையும்.
அமெரிக்கா சட்டவிரோத குடியேறிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருவதால் அங்கு தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும், அதனால் இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மோசமாகப் பாதிக்கும்.
அதே போல ஐரோப்பாவின் பொருளாதாரம் நடப்பாண்டில் 1% இருக்கும். மேலும் இங்கு ஏற்றுமதி கணிசமாக பாதிக்கப் பட்டிருப்பதால் பொருளாதார வளர்ச்சி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வீட்டு வசதித் துறை பெரும் சரிவை சந்தித்திருப்பதன் விளைவாக அது சீனாவின் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதித்துள்ளது. நடப்பாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாகவும் வரும் 2026-ல் அது 4.2 சதவீதமாகவும் குறையும்.
தற்போது 1 சதவீதமாக இருக்கும் ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 0.5 சதவீதமாக குறையக்கூடும்.
ஆனால் இந்தியாவின் ஏற்றுமதி கணிசமான வகையில் அதிகரித்து வருகின்றது. இது இந்தியாவின் உள்நாட்டு சந்தையின் அபரிமிதமாக வளர்ச்சியை காட்டுகிறது. இதன் காரணமாக உலகளாவிய அளவில் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியாவே நீடிக்கும். நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.9% - வும் இது 2026-ல் 6.4% -ஆக அதிகரிக்கும்.
இவ்வாறு பொருளாதாரம் குறித்து அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.