உடுமலை அருகே பயங்கரம்: காவல் உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை

By News Dsk

உடுமலை: திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் பகுதியில் தந்தை - மகன் இடையேயான பிரச்சினையை விசாரிக்க சென்ற பொது ஏற்பட்ட தகராறில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் என்ற ஊரில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டதில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டியன் இருவரும் தங்கி பணியாற்றுகின்றனர். செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதையில் தங்கபாண்டி தனது தந்தை மூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அருகில் வசிப்போர் காவல் அவசர உதவி எண் 100-க்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் இதை விசாரிக்க சென்றுள்ளார். அப்போது காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல், சண்டையை பிரித்து மூர்த்தியை ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தங்கபாண்டி உதவி ஆய்வாளர் சண்முகவேலை தாக்கி வெட்டியதில் உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அங்கிருந்து தப்பிய ஓட்டுநர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த குடிமங்கலம் போலீஸார் தப்பிச் சென்ற தங்கபாண்டியை தேடி வருகின்றனர்.

மேலும் கோவை சரக டிஐஜி, திருப்பூர் எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE