வாஷிங்டன்: ஏற்கெனவே 25 சதவீத வரி அறிவித்து அது 7ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 25% கூடுதலாக அதை 50% ஆக உயர்த்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து இந்தியா உள்ளிட்ட 100 - க்கும் அதிகமான நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தியதுடன் 10 சதவீத அடிப்படை கட்டணத்தையும் ட்ரம்ப் விதித்தார். இதன் தொடர்ச்சியாக இந்தியா மீது 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி உயர்வு ஆகஸ்ட் 7- ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தாவிட்டால் கூடுதல் வரிவிதிப்பு இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான இறக்குமதி வரியை மேலும் 25% உயர்த்தி அதை 50% ஆக உயர்த்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த வரி உயர்வின் மூலம் ஜவுளி, ஆயத்த ஆடை, நகைகள், தோல், காலணிகள், விலங்கு பொருட்கள், ரசாயனங்கள் போன்ற துறைகள் பாதிப்படையும் என்றும் அதே சமயம் மருந்து பொருட்கள், இயற்கை எரிவாயு, நிலக்கரி, மின்சாரம், கணினி, டேப்லெட், ஸ்மார்ட்போன் போன்ற துறைகளுக்கு பாதிப்பு இருக்காது நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மேலும் இந்த வரி உயர்வு 21 நாட்களில் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வரி உயர்வு பற்றி இந்திய அரசு "அமெரிக்காவின் நடவடிக்கை ஏற்கக்கூடியதல்ல. இது நியாயமற்றது. தேச நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும். நாட்டு மக்களின் எரிசக்தி தேவையை உறுதி செய்வதே அரசின் முக்கிய நோக்கம்" தெரிவித்துள்ளது.