Washington, USA: அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் பயணிகள் விமானம் ராணுவ ஹெலிகாப்டருடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்த 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
அமெரிக்கவில், அமெரிக்க இராணுவ H60 ஹெலிகாப்டரும், PSA ஏர்லைன்ஸுக்கு சொந்தமான CRJ-700 விமானமும் வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையத்தில் (Washington Reagan National Airport (DCA)) தரையிறங்க முயன்ற போது மோதிக்கொண்டன. விபத்தில் சிக்கிய விமானம் போடோமாக் ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த விமானத்தில் 60 பயணிகள் வரை பயணித்திருக்கலாம் என்றும், ராணுவ ஹெலிகாப்டரில் 3 வீரர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரகால மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளார் . இதனிடையே பாதுகாப்பு கருதி ரீகன் தேசிய விமான நிலைய (Washington Reagan National Airport) செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விமான வருகை மற்றும் புறப்பாடு தற்காலிகமாக மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன.