ராமதாஸ், சசிகலா தலைமையில் புதிய கூட்டணி: 234 தொகுதிகளிலும் போட்டி!

By News Dsk

சென்னை: தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் திரு. ராமதாஸ் தலைமையிலான பாமக மற்றும் திருமதி சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய 2 கட்சிகள் இணைந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தல்-2026 கூட்டணி தொடர்பாக தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அபுமமுக கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோர் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் முடிவாக இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இனணந்து கூட்டணி அமைக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தின் துரோக அடையாளங்களை களைந்து மக்கள் நலனையும், தமிழகத்தின் சுயமரியாதை மற்றும் தன்னாட்சி மேம்படுத்தும் விதமாக இந்தக் கூட்டணி செயல்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் ராமதாஸ் மற்றும் சசிகலா இருவரும் கூட்டாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அதில் தங்கள் கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்றும் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் தெரிவித்தனர். மேலும் தங்கள் கொள்கையுடன் ஒத்துப்போகும் கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்றும் அழைப்பு விடுத்தனர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE