இன்றைய தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.
பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்ய பாகிஸ்தான் தீவிர முயற்சி செய்து வரும் நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர், பாகிஸ்தான் ராணுவத் தளபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, அமைதிக்கான அமெரிக்காவின் நிபந்தனைகள் குறித்து ஈரான் விவாதித்ததாக கூறப்படுகிறது.
----------------------------------
ஆம் ஆத்மி எம்.பி.க்கள் கட்சித் தாவல் விவகாரம்: குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டம்!
ஆம் ஆத்மி கட்சியின் ஏழு மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆம் ஆத்மியிலிருந்து விலகி, நேற்று பாஜகவில் இணைந்த நிலையில் அவர்களை பதவியில் இருந்து திரும்பப் பெறுவது குறித்த தனது நிலைப்பாட்டை முன்வைப்பதற்காக, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க நேரம் கோரியுள்ளார்.
----------------------------------
தலைமை தேர்தல் ஆணையரை நீக்க எதிர்க்கட்சிகள் மீண்டும் முயற்சி
பிஹார் மற்றும் மேற்குவங்கத்தில் நடைபெற்ற எஸ்ஐஆர் பணியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று 193 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கொடுத்த நோட்டீஸ் நிராகரிக்கப்பட்ட நிலையில் 73 எம்.பி.க்கள் மீண்டும் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
----------------------------------
வாக்கு எண்ணும் மையத்தில் தினமும் ஆய்வு: தேர்தல் ஆணையம் உத்தரவு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.23-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் 1,06,408 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 62 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் தினமும் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி ஆகியோர் ஆய்வு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
----------------------------------
தமிழகம், மேற்கு வங்கத்தில் மறு வாக்குப்பதிவு இல்லை: தேர்தல் அதிகாரிகள் தகவல்!
கடந்த 23-ம் தேதி நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவை முதற்கட்டத் தேர்தல் ஆகியவற்றில் எந்த வாக்குச் சாவடியிலும் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்படவில்லை என்று இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
----------------------------------
45 தொகுதிகளில் 90%க்கு மேல் வாக்குப்பதிவு: 93 சதவீதத்துடன் கரூர், வீரபாண்டி முதலிடம்!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 234 தொகுதிகளிலும் கடந்த 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தம் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் வரலாற்றில் முதன்முறையாக 85.10 சதவீதம் பேர் வாக்களித்தனர். 45 தொகுதிகளில் 90 சதவீதத்துக்கு மேலும் அதிகபட்சமாக கரூர், வீரபாண்டி தொகுதிகளில் 93 சதவீதத்துக்கும் மேலும் வாக்குகள் பதிவாகி உள்ளன.
----------------------------------
ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் த்ரில் வெற்றி: ஐபிஎல் 2026!
சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைத் வீழ்த்தி வெற்றி பெற்றது. 229 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி18.3 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து அபார வெற்றி பெற்றது.