இன்றைய தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.
துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பினார் ட்ரம்ப்: விருந்து நிகழ்ச்சியில் விபரீதம்!
அமெரிக்க அதிபர் மாளிகை பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ட்ரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். துப்பாக்கிச்சூடு நடத்திய ஆசிரியர் கோல் தாமஸ் ஆலன் கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
----------------------------------
ரவுடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக வேட்டையாடும்: மேற்கு வங்கத்தில் மோடி உறுதி!
திரிணமூல் காங்கிரஸின் காட்டு தர்பார் ஆட்சியின் கீழ், இளம் பெண்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மே 4-ஆம் தேதி மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ரவுடிகளையும், பாலியல் குற்றவாளிகளையும் வேட்டையாடிப் பிடிப்போம் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
----------------------------------
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ் உள்பட மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், ‘நீட்’ தேர்வில் தகுதி அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. இந்த கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மே 3-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது.
----------------------------------
தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரிப்பு: மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக மே மாதம் முதல் தமிழகத்தின் மின் தேவை அதிகரித்து பற்றாக்குறை ஏற்படலாம் என்றும் இதை சமாளிக்க, கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
----------------------------------
நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க மைல்கல்: கல்பாக்கம் அணு உலை குறித்து பிரதமர் மோடி பாராட்டு!
தமிழகத்தின் கல்பாக்கத்தில் உள்ள அதிவேக ஈனுலை, அதன்செயல்பாட்டின் தொடக்க நிலையை எட்டியுள்ளது. பாரதத்தின் அணுசக்தி பயணத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் ஆகும். இந்த முக்கிய சாதனையின் மூலம் நமது அணு சக்தி விஞ்ஞானிகள் பாரதத்தைப் பெருமைப்படுத்தி உள்ளனர் என்று ‘மன் கீ பாத்’ உரையில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
----------------------------------
தமிழகத்தில் மயோனைஸ் மீதான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு!
பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு விதிக்கப்பட்ட தடையை, மேலும் ஓராண்டு காலத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் வெளியிட்டுள்ளார்.
----------------------------------
சூப்பர் ஓவரில் லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
லக்னோ ஏகானா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் 38-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் த்ரில் வெற்றி பெற்றது.