பட்ஜெட் தாக்கலின் போது, புதிய வருமான வரி சட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார் நிதியமைச்சர். அதன்படி, மக்களவையில் நேற்று புதிய வருமான வரி (New Income Tax Bill 2025) மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 1961-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சுமார் 60 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் வருமான வரி சட்டத்தில், சாமானியர்களுக்கும் புரியும் வகையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில் இந்த புதிய சட்டத்தில் எண்ணற்ற திருத்தங்கள் இருக்கும் எனவும், இந்தத் திருத்தங்களால் புதிய சட்டம் எளிமைப்படுத்த பட்டுள்ளது என்றும் நிறைய கடினமான பிரிவுகள் நீக்கப்பட்டு சாமானிய மக்களும் விரைந்து புரிந்து கொள்ள எதுவாக வடிவமைக்க பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
அதன்படி, மிக முக்கியமான மாற்றங்களாக,
* மசோதாவில் உள்ள ‘வரி செலுத்துவோா் சாசனம்’, வரிசெலுத்துவோரின் உரிமைகள் மற்றும் கடமைகளை எடுத்துரைக்கின்றன.
* 622 பக்கங்களைக் கொண்ட இந்த மசோதாவில், புதிதாக எந்த வரிகளும் சோ்க்கப்படவில்லை. புதிய மசோதாவில் 23 அத்தியாயங்கள், 536 பிரிவுகள் மற்றும் 16 அட்டவணைகள் உள்ளன. அதிக பிரிவுகள் இருந்த போதிலும், கூடுதல் விதிகள் நீக்கம் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட மொழி காரணமாக மசோதா எளிமைப் படுத்தப்பட்டுள்ளது.
* புதிய மசோதாவில் முந்தைய ஆண்டு (Previous Year) என்ற வாா்த்தையும், மதிப்பீட்டு ஆண்டு (Assessment year) என்ற வார்த்தை நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக 'வரி ஆண்டு' (Tax Year) என்று மாற்றப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 1, 2026 முதலான புதிய 'வரி ஆண்டு' - லிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.
* முக்கியமாக, புதிய சட்டத்தில் பழைய வரி முறையும் அப்படியே தொடரும், ஆனால் புதிய வரி முறை வரி வரிசெலுத்துவோரின் முதன்மை விருப்பமாக தேர்வு செய்யப்பட்டிருக்கும்.
* வணிகத்திற்கான 44AD வரம்பு 2 கோடியிலிருந்து 3 கோடியாகவும், தொழில் வல்லுநர்களுக்கு வரம்பு ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.75 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
* இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும், தொடர்ந்து மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யவுள்ளார் நிர்மலா சீதாராமன்.