புதுடெல்லி: இன்று (பிப்.17) காலை 5.36 மணிக்கு தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவு கோளில் 4.0 என்ற அளவில் பதிவாகியுள்ளது.
புது டெல்லி மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகள் இன்று (பிப்.17) காலை 5.36 மணிக்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்திய நேரப்படி 05:36:55 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது.
தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (National Center for Seismology - NCS) இதை உறுதி செய்துள்ளது. டெல்லியை மையமாகக் கொண்டு வட இந்தியாவின் பல பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் பூமியில் 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், "டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அனைவரும் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும், சாத்தியமான பின்அதிர்வுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன். நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி ரயில் நிலையத்தில் கடை வைத்துள்ள வியாபாரி ஒருவர் கூறும்போது, ‘திடீரென அனைத்தும் அதிர ஆரம்பித்தது. எனது வாடிக்கையாளர்கள் அலறினர்’ என்று தெரிவித்துள்ளார்.