மாசி பிரம்மோற்சவம்: திருத்தணி முருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

By News Dsk

திருத்தணி: இன்று (மார்ச் 3) அதிகாலை 4.30 மணிக்கு திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவம் விழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது மரபு. அந்த வகையில் இந்த வருட மாசி பிரம்மோற்சவம் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

இன்று தொடங்கியுள்ள மாசி பிரம்மோற்சவ விழா இந்த மாதம் 13-ம் தேதி வரை நடைபெறும். இதில் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானையுடன் சிம்ம வாகனம், ஆட்டுக்கிடா, வெள்ளி மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் தருவார். இந்நிகழ்வில், திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர் மட்டுமன்றி தமிழகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்கள் திரளானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர்.

மாசி பிரம்மோற்சவம் விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா வரும் 9- ம் தேதியும், பாரிவேட்டை மற்றும் வள்ளி திருக்கல்யாணம் ஆகியவை வரும் 10-ம் தேதியும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE