ஆண்டாள் திருப்பாவை 5:
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!
பொருள்: மாய வித்தைகள் புரிபவனும், மதுராபுரியில் அவதரித்தவனும், தூய்மையான பெரு நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றில் பிறந்து அந்த வயிற்றுக்கு பெருமை அளித்தவனுமான எங்கள் தாமோதரனை, நாம் நீராடி தூய்மையாக போய், நல்ல மணம் வீசும் மலர்களை தூவி, அவனை மனதில் இருத்தி வாய் முழுக்க அவன் புகழ் பாடினால், இதுவரை நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய் விடும் என்று ஆண்டாள் தன் தோழிகளை பாவை வழிபாட்டிற்கு அழைக்கிறாள்.
இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.