ஆண்டாள் திருப்பாவை பாடல் 6 (மார்கழி 6-ம் நாள்): உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!

By News Dsk

ஆண்டாள் திருப்பாவை 6:

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!

பொருள்: அன்புத்தோழியர்களே சீக்கிரம் எழுந்திருங்கள்! பறவைகள் எல்லாம் அதிகாலையிலேயே எழுந்து கீச்சிடும் இனிய ஒலி உங்கள் காதில் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட பெருமாளின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் சப்தம் உன் காதில் விழவில்லையா? பேய் வடிவில் தன்னை கொல்ல வந்த அரக்கி பூதகியிடம் பால் குடிப்பது போன்று நடித்து அவளது உயிரை பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரை குடித்தவனுமான கண்ண பிரானை யோகிகளும், முனிவர்களும் ஹரி ஹரி என்று அழைக்கும் பெரும் சத்தம் உன்னை எட்டவில்லையா? உடனே எழுந்து குளித்து விட்டு பாவை நோன்புக்கு வாருங்கள் என்று ஆண்டாள் தன் தோழிகளை அழைக்கிறாள்.

இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE