ஆண்டாள் திருப்பாவை 9:
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்!
பொருள்: பிரகாசமான நவரத்தினங்களினால் கட்டப்பட்ட மாளிகையை சுற்றியும் விளக்கெரிய, தூபங்கள் நறுமண திரவிய வாசம் வீச, அழகிய பஞ்சு மெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! எங்களுடன் சேர்ந்து அவளை எழுப்புங்கள். உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் என்ன ஊமையா? அல்லது செவிடா? இல்லை சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் மாட்டிகொண்டாளா? அவள் பதிலே சொல்லாமல் உறங்கிக்கொண்டிருக்கிறாள்! அவளை உடனே எழுப்புங்கள். அவள் எங்களோடு இணைந்தால் அந்தக் கண்ணனை, மிகப்பெரிய மாயங்கள் செய்வதில் வல்லவன்.., வைகுந்தன்.., மாதவன் என்று பல்வேறு நாமங்கள் சொல்லிப் போற்றிப் பாடி பாவை நோன்பை கொண்டாடி மகிழலாம்" என்று ஆண்டாள் தன் தோழியை எழுப்புகிறாள்..
இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.