ஆண்டாள் திருப்பாவை பாடல் 10 (மார்கழி 10-ம் நாள்): போற்றப் பறை தரும் புண்ணியன் நம் பெருமாள்!

By News Dsk

ஆண்டாள் திருப்பாவை 10:

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!

பொருள்: முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை வழிபட்டதன் பயனாக இப்பிறவியில் சொர்கத்திலுள்ள அனைத்து சுகங்களையும் இவ்வுலகிலேயே அனுபவிக்கின்ற பெண்ணே! உன் இல்லக் கதவை திறக்கா விட்டாலும் பரவாயில்லை. பேச கூட மாட்டாயோ? உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ முன்னொரு காலத்தில் தூக்கத்திற்கு உதாரணமாகச் சொன்ன கும்பகர்ணனையே தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறதே!. சோம்பலின் திலகமே! கிடைப்பதற்கரிய அணிகலனே! எந்த பதற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா. நறுமணம் வீசும் துளசியை தன் தலையில் சூடியுள்ள நாராயணனை நாம் போற்றி பாடினால் அதற்குரிய பலனை நிச்சயம் தருவான் என்று ஆண்டாள் தன தோழியை மார்கழி நோன்புக்கு எழுப்புகிறாள்.

இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE