ஆண்டாள் திருப்பாவை 14:
உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!
பொருள்: "உங்கள் வீட்டின் கொல்லைப் புற தோட்டத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து, ஆம்பல் மலர்கள் தலை சாய்ந்து விட்டன. வெண்பற்கள் கொண்ட காவி உடையணிந்த துறவிகள் அனைவரும் திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக கோயில்களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் முன்னதாகவே வந்து உங்களை எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாமைக்காக வெட்கப்படாத பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற அழகிய கண்களை உடைய கண்ணனைப் பாட சீக்கிரம் எழுந்து எங்களுடன் வா!..." என்று ஆண்டாள் தன் தோழியை எழுப்புகிறாள்.
இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.