ஆண்டாள் திருப்பாவை 26:
மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.!
பொருள்: "பக்தர்கள் மீது பேரன்பு கொண்ட திருமாலே! மார்கழியில் நீராடி பாவை நோன்பு இருந்து உன்னை வேண்டுபவர்களுக்கு வேண்டியதையல்லாம் கொடுப்பவனே!, உலகத்தையே நடுங்க வைக்கும் பால் சோறின் நிறத்தில் இருக்கும் பாஞ்ச சன்னியம் என்னும் வலம்புரி சங்கு உடையவனே!. பலவிதமான வலம்புரி சங்குகள், முரசுகள் ஒலிக்க, நாங்கள் பல்லாண்டு பாடி இசைத்தபடி பலவிதமான மங்கல விளக்குகள் ஏற்றி வைத்து காத்திருக்கிறோம். ஆலிலையில் மிதப்பவனே, மார்கழியில் நாங்கள் நோற்ற பாவை நோன்பினை நிறைவு செய்வதற்கு உன்னுடைய அருளை தந்து அருள்வாயாக.!"
இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.