ஆண்டாள் திருப்பாவை பாடல் 29 (மார்கழி 29 - ம் நாள்): எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு!

By News Dsk

ஆண்டாள் திருப்பாவை 29:

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!

பொருள்: "கறவை மாடுகள் மேய்ச்சல் தொழிலை செய்து, அந்த மாடுகள் தரும் பாலினால் வரும் வருமானத்தில் பிழைக்கும் எங்களின் ஆயர்குலத்தில் பிறந்த உன்னுடைய அழகிய பொன்னான பாதங்களை கண்டு தரிசித்து வணங்குவதற்காக அதிகாலையிலேயே வந்திருக்கிறோம். கண்ணனே, எங்களது இந்த சிறிய விரதத்தில் ஏதாவது குறை இருந்தாலும் அதை மன்னித்து ஏற்றுக் கொண்டு, உன்னை தவிர மற்ற உலக பொருட்கள் மற்றும் பற்றுகள் அனைத்தையும் அழித்து, நமக்குள் உள்ள இந்த உறவு ஏழேழு பிறவிகளுக்கும் நீ எங்கள் குலத்தில் பிறப்பதன் மூலம் தொடரவும், என்றென்றைக்கும் உனக்கு மட்டுமே சேவை செய்யும் பெரும் பாக்கியத்தையும் இந்த பாவை நோன்பை ஏற்றுக்கொண்டு எங்களுக்கு அருள்வாயாக!"

இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE