தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில் 23 - வது ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா ஜூன் மாதம் 25 ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக வராகி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் தனி சன்னதியில் வாராஹி அம்மன் அருள்பாலிக்கிறார். இங்கு ஆண்டுதோறும் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி 23-வது ஆஷாட நவராத்திரி விழா கடந்த 25ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தினமும் வாராஹி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து மாலை ஆஷாட நவராத்திரி முதல் நாள் விசேஷ அலங்காரமான இனிப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து,
நேற்று மஞ்சள் அலங்காரமும்,
இன்று வெள்ளிக்கிழமையன்று குங்கும அலங்காரமும்,
28 - ம் தேதி சந்தன அலங்காரமும்,
29 - ம் தேதி தேங்காய்ப்பூ அலங்காரமும்,
30 - ம் தேதி மாதுளை அலங்காரமும்,
ஜூலை 1 - ம் தேதி நவதானிய அலங்காரத்திலும்,
ஜூலை 2 - ம் தேதி வெண்ணெய் அலங்காரத்திலும்,
ஜூலை 3 - ம் தேதி கனிவகை அலங்காரத்திலும்,
ஜூலை 4 - ம் தேதி காய்கறி அலங்காரத்திலும்,
ஜூலை 5 - ம் தேதி புஷ்ப அலங்காரத்திலும்
வாராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
மேலும் ஜூலை 5 - ம் தேதி மாலை வாண வேடிக்கையுடன் சிறப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன் எழுந்தருளி 4 ராஜவீதிகளில் வீதி உலா நடைபெறுகிறது.