புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நாளை 2026 - க்கான மத்திய பட்ஜெட்டை (Budget 2026) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அதன் காரணமாக விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையன்றும் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் சிறப்பு வர்த்தகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சியின் பிடியில் இருந்தபோது லண்டன் நேர அட்டவணையின் படி, பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் மாலை 5 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. அதை 1999-ம் ஆண்டு அப்போதைய மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா மாற்றி, அன்று முதல் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது நடைமுறைக்கு வந்தது.
பின்பு கடந்த 2017-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதியை நிர்வாக வசதிகள் போன்ற காரணங்களுக்காக பிப்ரவரி 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
அந்த வகையில் பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதன்மூலம் தொடர்ச்சியாக 9-வது ஆண்டாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.
ஞாயிற்றுக்கிழமை அரசு அலுவலகங்கள் மற்றும் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை தினமாக இருந்தாலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால், நாளைய தினம் சிறப்பு வர்த்தக நாளாக தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் மும்பை பங்குச் சந்தை(BSE) ஆகியவை அறிவித்துள்ளன.
அதனால் நாளை காலை 9.15 மணி முதல் மாலை 3.30 மணி வரை பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வழக்கம் போல நடைபெறும் என்றும் முதலீட்டாளர்கள் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு ஏற்ப நாளையே வர்த்தகத்தில் ஈடுபடுவார்கள் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.