புதுடெல்லி: இந்திய நாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று (15-08-2025) டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாட்டின் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேச தலைநகரங்கள், மாவட்ட தலைநகரங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை 7.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி 12-வது முறையாக தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
செங்கோட்டைக்கு வரும் பிரதமர் மோடியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் சஞ்சய் சேத், செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் வரவேற்பார்கள். பின்பு தேசிய கோடி ஏற்றும் பிரதமர் ராணுவம், கடற்படை, விமானப் படை மற்றும் டெல்லி காவல் துறையை சேர்ந்த வீரர்களின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார்.
அடுத்து பிரதமரின் நாட்டுமக்களுக்கான உரை இடம்பெறும். இதில் நம்முடைய பொருளாதார வளர்ச்சி, அடுத்த குறிக்கோள்கள், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை, இந்தியா-பாக்., ராணுவ மோதல் விவகாரம், டிரம்ப்பின் வரிவிதிப்பு, வெளியுறவுக் கொள்கை, விண்வெளியில் சாதனை உள்ளிட்ட அதி முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் பற்றிய பிரதமரின் கருத்துக்கள் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிரதமா் மோடி, வளா்ந்த இந்தியா என்ற இலக்கை தொடா்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் அதுபற்றிய முக்கியத்துவமும் இன்றைய சுதந்திர தின உரையில் இடம்பெறும்.
சுதந்திர தின விழா அழைப்பிதழில் ஆபரேஷன் சிந்தூரின் சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஆபரேஷன் சிந்தூரை பறைசாற்றும் விதமாக செங்கோட்டை வளாகத்தில் சிறப்பு மலர் அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி தேசிய கொடியேற்றும்போது ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்படும்.
இந்த வரலாற்று முக்கிய விழாவை முன்னிட்டு செங்கோட்டை வளாகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டு உள்ளது. சுமார் 11,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் காவல், ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ட்ரோன்களை வீழ்த்தும் தடுப்பு கவசங்கள், வெடிபொருட்கள் கண்காணிப்பு கருவிகள், அதிநவீன சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவை மூலம் செங்கோட்டை மற்றும் சுற்று பகுதிகள் கண்காணிப்பில் உள்ளன.
மேலும் நாடு முழுவதும் இருந்து 85 பஞ்சாயத்து தலைவர்கள், பாதுகாப்புப் படை, விளையாட்டு, தன்னார்வ தொண்டு ஊழியர்கள் உட்பட 5,000 சிறப்பு விருந்தினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக தாக்கல் வெளியாகியுள்ளது.
இந்த 79-வது சுதந்திர தின நன்னாளில் நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களை நினைவுகூர்வோம். பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்!!!
வந்தே பாரதம்... பாரத் மாதகி ஜே... ஜெய்ஹிந்த்...