சென்னை: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்த ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சென்னை - நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்துள்ள நிகழ்வு திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கில் திரையுலகைச் சேர்ந்த வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த பிரசாத் என்பவரிடமிருந்து போதைப்பொருள் வாங்கியதாக நடிகர் ஸ்ரீகாந்த் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். மேலும் 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஒரு கிராம் போதைப் பொருளை நடிகர் ஸ்ரீகாந்த் அவரிடமிருந்து 40 முறைக்கு மேல் வாங்கிப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதற்கான பணப் பரிவர்த்தனை அவர் கூகுள் பே மூலம் செய்துள்ளதாகவும் தெரிகிறது.
இதுபற்றி காவல்துறையினர் தீவிர நடத்திய நிலையில் இன்று காலை நடிகர் ஸ்ரீகாந்த்தை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது அவருக்கு மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் அவரை நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த போதைப்பொருள் சம்பந்தமாக வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்றும் நுங்கம்பாக்கம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப்பொருள் வழக்கில் ஏற்கெனவே பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையிலேயே நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் ஏற்கனவே கானா நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.