பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான பர்மிங்காம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2-ஆவது இன்னிங்சிலும் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை முறியடித்து, இந்திய அணியை வலுவான நிலையில் நிலை நிறுத்தியுள்ளார்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பர்மிங்காம் நகரில் கடந்த ஜூன் 2ம் தேதி தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்களை அடுத்தது. கேப்டன் கில் 269 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து, பேட் செய்த இங்கிலாந்து 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மீண்டும், 4-ஆம் நாளான இன்று 180 ரன்களுடன் 2 ஆவது இன்னிங்சை இந்தியா தொடங்கியது. இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், கருண் நாயர், பன்ட் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
பின்னர் ஜடேஜாவுடன் இணைந்து இன்னிங்ஸை கட்டமைத்த கில் 129 பந்துகளில் சதம் எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் எடுத்த இந்திய கேப்டன்களில் சுனில் கவாஸ்கர், விராட் கோலி ஆகியோருக்கு பிறகு அந்த வரிசையில் கில் இணைந்துள்ளார்.
தேநீர் நேர இடைவேளையின் போது இரண்டாவது இன்னிங்ஸில் 68 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 304 ரன்களை எடுத்து, இந்தியா 484 ரன்கள் என்ற முன்னிலையை இந்த ஆட்டத்தில் பெற்றுள்ளது.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தில் 3 சதங்களை அடித்த முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமையையும் கில் பெற்றுள்ளார்.