Maha Kumbh Mela 2025: பக்தர்களுக்கு யோகி ஆதித்யநாத் விடுத்த முக்கிய வேண்டுகோள்

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் (Maha Kumbh Mela) திரிவேணி சங்கமத்தில் அமாவாசையை யொட்டி புனித நீராட ஒரே இடத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.
இதையொட்டி லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து நாள் முழுவதும் கும்பமேளா நிகழ்வுகளை கண்காணித்து வருவதாகவும், செவ்வாய்க்கிழமை இரவு முதல் பிரயாக்ராஜ் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இருந்து வருவதாகவும், காவல்துறை, பேரிடர் மீட்புப் படைகள் உட்பட அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், திரிவேணி சங்கமத்தில் தான் நீராட வேண்டும் என்று எண்ணி ஒரே இடத்தில் குவிய வேண்டாம் என்று பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக இந்த துயர சம்பவம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது மிகவும் கவலையளிப்பதாகவும், காயமடைந்தவர்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வதாகவும் கூறியுள்ளனர்.
Tags:
#Maha Kumbh Mela 2025 #Yogi Adityanath #Triveni Sangam #bathing Kumbh Mela #Kumbh Mela Tragedy