மார்ச் 30, 2026 தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்: இன்று தொடங்குகிறது!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 4 நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால், முதல் நாளான இன்றே மனுதாக்கல் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதையொட்டி தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
-----------------------------------
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: இல்லத்தரசிகளுக்கு ரூ.8000 கூப்பன்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். வருமான வரி செலுத்தாத குடும்பத்தை சேர்ந்த இல்லத்தரசிகளுக்கு வாஷிங் மெஷின், டிவி, பிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன், மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் வாங்க ரூ.8 ஆயிரம் மதிப்பில் கூப்பன் வழங்கும் 'இல்லத்தரசி' திட்டம் உள்ளிட்ட பலவற்றை அறிவித்துள்ளார்.
-----------------------------------
லாக்-டவுனுக்கு வாய்ப்பே இல்லை: உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்!
அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் "சர்வதேச அளவில் எரிபொருள் சார்ந்த நெருக்கடி நிலை இருந்த போதும் நம் தேசம் முழுவதும் நிலைமை சீராக உள்ளது என்றும் லாக்-டவுனுக்கு வாய்ப்பே இல்லை" என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
-----------------------------------
மக்கள் ஆசியுடன் கேரளாவில் பாஜக ஆட்சி: பிரதமர் மோடி உறுதி!
கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாலக்காட்டில் நேற்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி "கேரள மாநில அரசியலில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அனைத்துத் தரப்பினரும் பாஜக மற்றும் என்டிஏகூட்டணியின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும் தொண்டர்களின் அயராத உழைப்பு, அவர்களின் தியாகம் மற்றும் மக்களின் ஆசி ஆகியவற்றின் மூலமே கேரளத்தில் இந்த மாற்றம் சாத்தியமாகியுள்ளது" என்றும் தெரிவித்தார்.
-----------------------------------
234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 234 தொகுதிகளுக்குமான தவெகவின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அவர்களை அறிமுகப்படுத்தினார் தவெக தலைவர் விஜய். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், கோபிசெட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
-----------------------------------
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: தேநீர், சிற்றுண்டி, சாப்பாடு விலை உயர்வு!
காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், கள்ளச்சந்தையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்களை பல ஆயிரம் ரூபாய் கூடுதலாகக் கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஓட்டல்களில் தேநீர், சிற்றுண்டி, சாப்பாடு உள்ளிட்டவற்றின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
-----------------------------------
ஐபிஎல் 2026: கொல்கத்தாவை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது முதல் லீக் ஆட்டத்திலேயே வெற்றி பெற்றுள்ள மும்பை அணி, 14 ஆண்டுகால நீண்ட கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.