இன்றைய தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு!
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் கடந்த 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. 234 தொகுதிகளில் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 62 மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
----------------------------------
லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம்: 3 வாரங்களுக்கு நீட்டிப்பு என ட்ரம்ப் அறிவிப்பு!
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த வாரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதற்கான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டது. அமெரிக்காவில் உள்ள லெபனான் மற்றும் இஸ்ரேல் தூதர்கள் இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த நிலையில், போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
----------------------------------
அமெரிக்காவின் அனுமதியின்றி ஹார்முஸ் ஜலசந்திக்குள் நுழைய முடியாது: டொனால்ட் ட்ரம்ப்!
ஹார்முஸ் ஜலசந்தி மீது அமெரிக்கா முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க கடற்படையின் அனுமதியின்றி எந்த கப்பலும் உள்ளே நுழையவோ வெளியேறவோ முடியாது என்றும் ஈரான் ஒரு உடன்பாட்டை எட்டும் வரை இது இறுக்கமாகவே மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
----------------------------------
ஆம் ஆத்மி-யில் உள்கட்சி மோதல்: பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்!
ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவையில் 10 எம்.பி.க்கள் உள்ள நிலையில் கட்சியின் முக்கியத் தலைவர் ராகவ் சத்தா உள்ளிட்ட 7 மாநிலங்களவை எம்.பி.க்கள், ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் மீதான அதிருப்தியின் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
----------------------------------
உ.பி-யில் மீண்டும் ஆதித்ய நாத்தே முதல்வர் வேட்பாளர்: பாஜக தலைவர் நிதின் நவீன்!
அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி, தனது ‘மிஷன் 2027’ என்ற தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்ட நிலையில், பாஜக... 2027 சட்டப்பேரவைத் தேர்தலில் யோகி ஆதித்ய நாத்தே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று அக்கட்சியின் தலைவர் நிதின் நவீன் அறிவித்துள்ளார்.
----------------------------------
தமிழகத்தில் ஏப்.30 வரை மழை பெய்ய வாய்ப்பு!
தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஏப். 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
----------------------------------
குஜாரத் டைட்டன்ஸை வீழ்த்தியது ஆர்சிபி: படிக்கல், கோலி அபார ஆட்டம்!
பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் சீசனின் 34-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது. 206 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆர்சிபி 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றி பெற்றது.