இன்றைய தேதியின் மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொகுத்து இங்கே காணலாம்.
“இனியும் நல்லவராக இருக்க முடியாது”: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
போர் அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ஈரானின் நிபந்தனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சமீபத்தில் தெரிவித்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில், ‘இனியும் நல்லவராக இருக்க முடியாது’ என்ற வாசகத்துடன் குண்டுகள் வெடிக்கும் பின்னணியில், கையில் துப்பாக்கியுடன் காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
----------------------------
S-400 பாதுகாப்பு கவச வாகனம்: இந்தியாவிடம் ஒப்படைத்த ரஷ்யா!
ரஷ்யாவிடம் இருந்து 5 அதிநவீன எஸ்-400 வான் பாதுகாப்பு கவச வாகனம் வாங்க கடந்த 2018-ல் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதன்படி 3 பாதுகாப்பு கவசங்கள் இந்தியாவிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்ட நிலையில் 4-வது எஸ்-400 வான் பாதுகாப்பு கவச வாகனத்தை ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. இவை பாகிஸ்தான், சீன எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டு உள்ளன.
----------------------------
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு: தமிழகம், புதுச்சேரியில் மீண்டும் ஆளும் கட்சிகளுக்கே வாய்ப்பு!
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் திமுக ஆட்சியைத் தொடரும் என்றும், புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தொடரும் என்றும் பல்வேறு நிறுவனங்களின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
----------------------------
சான்றிதழ் வெற்று விளம்பரத்துக்கே பயன்படும்: பார்த்திபன் வழக்கில் ஐகோர்ட் கருத்து!
சாதி, மதமற்றவர் என்பதை மனதார பின்பற்றி நடத்தை மூலமாக வெளிப்படுத்தினாலே போதும். அதற்கு சான்றிதழ் அவசியம் இல்லை எனவும், அவ்வாறு சான்றிதழ் வழங்கினால் அது வெற்று விளம்பரத்துக்குத்தான் பயன்படும் எனவும் நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
----------------------------
எரிபொருள் விலை உயர்வு எதிரொலி: மத்திய அரசுக்கு விமான நிறுவனங்கள் கடிதம்!
போர்ச் சூழல் காரணமாக, விமான எரிபொருள் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இது தொடர்பாக ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பாக எழுதியுள்ள கடிதத்தில் "சேவைகளைத் தொடர்ந்து தொய்வின்றி வழங்க மத்திய அரசு உடனடியாக நிதி ரீதியிலான ஆதரவை வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
----------------------------
அனில் அம்பானி குழுமத்தின் ரூ.3,034 கோடி சொத்து முடக்கம்!
அனில் அம்பானி குழும நிறுவனங்கள் மீதான வங்கி மோசடி மற்றும் நிதி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. அதில் அனில் அம்பானி குழுமத்தின் ரூ.19,344 கோடி மதிப்புள்ள சொத்துகளை இதுவரை முடக்கியுள்ள அமலாக்கத் துறை, மேலும் ரூ.3,034 கோடி சொத்துகளை முடக்கியுள்ளது.
----------------------------
மும்பையை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்: ரிக்கல்டன் அபார சதம்!
வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 244 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றது.