Delhi Election 2025: விடாமுயற்சி !!! விஸ்வரூப வெற்றி !!!: 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியை கைப்பற்றிய பாஜக! #Analysis

09 Feb, 2025 12:07 PM
delhi-election-2025-bjp-captures-delhi-after-27-years

புதுடெல்லி: 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் வென்று அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது பா.ஜ.க,.

கடந்த 5-ம் தேதியன்று (Feb 2025, 05) டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் மற்றும் சுயேட்சைகள் என பலர் போட்டியிட்டனர். ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டனர். அதனால் ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே ஆரம்பம் முதலே கடும் போட்டி நிலவியது.

மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தின. பாஜக 68 தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களையும், 2 இடங்களில் கூட்டணி கட்சிகள் சார்பிலும் வேட்பாளர்களை நிறுத்தியது பாஜக.

வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெரும்பான்மையை நிரூபிக்க 36 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 1993-ம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதன் பின்னர் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

2020 தேர்தல் VS 2025 தேர்தல்:
2020 தேர்தலில் 8 இடங்களில் வென்ற பாஜக தற்போது 48 இடங்களிலும், 62 இடங்களில் வென்ற ஆம் ஆத்மி தற்போது 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸின் தொடர் தோல்வி:
காங்கிரஸ் போட்டியிட்ட 70 தொகுதிகளில் 68 தொகுதிகளில் டெபாசிட் இழந்தனர். இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மூன்றாவது முறையாக ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் கூட இல்லாதது அக்கட்சினரிடையே பெரும் கலக்கத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆம் ஆத்மி - அதிர்ச்சி:
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சவுரப் பரத்வாஜ், மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த சோமநாத் பாரதி உட்பட பிரபலமான 11 பேரின் தோல்வி அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் என்ன?

கட்சிகளின் இந்த வெற்றி தோல்விகளுக்கான காரணங்களாக அரசியல் நோக்கர்கள் கணிப்பின் படி,

* "இந்தியா" கூட்டணியின் இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்டதால் 'இந்தியா' கூட்டணியின் வாக்குகள் சிதறி, அதனால் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக-விடம் தோற்றனர்.

* மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிக்கி டெல்லி துணை முதல்வராக இருந்து மணீஷ் சிசோடியா கைதாகி சிறை சென்றதும், அதன்பின் முதல்வராக இருந்த அர்விந்த் கேஜ்ரிவால் கைதாகி சிறை சென்றதும் ஆம் ஆத்மியின் மீது மக்களுக்கு இருந்த நன்மதிப்பு குறைந்து தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

* அதே சமயம் பாஜக, வாக்காளர்களுக்கு இரட்டை இன்ஜின் வளர்ச்சி வாக்குறுதியை அளித்தது.

தலைவர்கள் கருத்து:

பிரதமர் மோடி: 10 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்து டெல்லி விடுதலை அடைந்துள்ளது. சர்வாதிகாரம். ஆணவத்தை தோற்கடித்து, வளர்ச்சி, நல்லாட்சிக்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன்.

அரவிந்த் கெஜ்ரிவால்: மக்களின் ஆணையை நாங்கள் மிகுந்த பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். இந்த வெற்றிக்கு பாஜகவை நான் வாழ்த்துகிறேன், மேலும் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்.

ராகுல் காந்தி, (காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்): டெல்லியின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். அனைத்து காங்கிரஸ் தொண்டர்களின் அர்ப்பணிப்புக்கும், ஆதரவளித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி. டெல்லியின் முன்னேற்றத்திற்கும் டெல்லி மக்களின் உரிமைகளுக்கும் - மாசுபாடு, பணவீக்கம் மற்றும் ஊழலுக்கு எதிராக - இந்தப் போராட்டம் தொடரும்.

அன்னா ஹசாரே: தேர்தலில் போட்டியிடுபோது வேட்பாளர்களுக்கு நல்ல குணமும், நல்ல யோசனைகளும் இருக்க வேண்டும். அவரது பிம்பத்தில் எந்தக் குறையும் இருக்கக்கூடாது. இதை நான் நீண்ட காலமாகவே சொல்லி வருகிறேன். ஆனால் ஆம் ஆத்மி கட்சியினருக்கு அது புரியவில்லை.

திருமாவளவன் (தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி): டெல்லியில் பாஜக முன்னிலையில் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆம் ஆத்மி இந்தளவுக்கு பின்னடைவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கவில்லை. INDIA கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. தங்களின் ஈகோ பிரச்னைகளை கட்சிகள் பின்னுக்குத் தள்ளிவைத்துவிட்டு நாட்டையும், மக்களையும் காப்பாற்றுவதற்கான வழியில் சிந்திக்க வேண்டும்.

டெல்லி தேர்தல் முடிவு நமக்கு உணர்த்துவது என்ன?

அரசியலை தாண்டி, மக்கள் தங்களுக்கான தலைவர்களின் அன்றாட செயல்பாட்டை கவனித்துக்கொண்டே இருப்பார்கள். மக்கள் நம்பிக்கையை பெற நமக்கு நல்ல குணமும், நல்ல யோசனைகளும், வெற்றி தோல்விகளை கடந்து உண்மையான அர்ப்பணிப்புடன் கூடிய மக்கள் பணியும் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

அத்துடன் மட்டுமன்றி விடாமுயற்சியும், தளராத நம்பிக்கையும் நமக்கு இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் விஸ்வரூப வெற்றி நம்மை வந்தடையும் என்பது, 27 ஆண்டுகளுக்கு காத்திருப்புக்கு பிறகு டெல்லியை கைப்பற்றியுள்ள பாஜக-விடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம்.

#delhi election 2025 #delhielection2025 #BJP #ElectionResult

Tags:

#delhi election #delhi election result #delhi election result 2025 #delhi election 2025 #AAP

Trending now

We @ Social Media