நிரம்பி வழியும் சிரஞ்சீவி பேச்சு பற்றிய செய்திகள்: நமக்கு உணர்த்துவதும் !!! நாம் உணர வேண்டியதும் !!!

"நான் வீட்டில் இருக்கும்போது லேடீஸ் ஹாஸ்டல் வார்டன் போல உணர்கிறேன். நம்முடைய மரபை தொடர ஒரு ஆண் வாரிசை பெற்றுக் கொடுக்குமாறு ராம் சரணிடம் தொடர்ந்து சொல்கிறேன். சரண் தனது மகளை மிகவும் நேசிக்கிறார். அவருக்கு மறுபடியும் ஒரு பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்" என்று ஒரு தந்தை தன்னுடைய மகனிடம் தெரிவித்த ஆசைக்கு இவ்வளவு பெரிய எதிர்வினையாற்றுவதும், உலகமே விரும்பாத அல்லது உலகத்தில் நடக்கக்கூடாத ஒன்றை இவர் செய்துவிட்டதை போல ஒட்டுமொத்த ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் நிரம்பி வழியும் செய்திகளால் ஒரு வித மனஉளைச்சல் மட்டுமன்றி செய்திகளின் மீது வெறுப்பும் உண்டாகிறது.
இதுபோன்ற அதீத கவனம் பெரும் செய்திகளை பார்க்கும் போது, நம்முடைய சிந்தனை முழுவதும் எதைப்பற்றி இருக்க வேண்டும் என யாரோ ஒரு சிலர் திட்டமிட்டு செய்யும் சூழ்ச்சிகள் நமக்கு புரியாமல் இல்லை. நம்முடைய எண்ணம், செயல், கவனம் என ஒட்டுமொத்த நகர்வுகளும் யாரோ ஒரு சிலர் தீர்மானிக்கும் ஒன்றைப் பின் பற்றி மட்டுமே செல்ல வேண்டும் என்பதும் மற்ற எந்த விஷயங்களில் சென்று விடக்கூடாது என்ற அவர்களின் நுண்ணிய அரசியலும் மிகவும் ஆபத்தானது.
செய்தியை செய்தியாக பதிவிடாமல் அதன் தலைப்பில் "பரபரப்பு, சர்ச்சை, குபீர், திடீர்,பின்னணி" போன்ற வார்த்தைகள் சேர்ப்பது வெறும் கவன குவிப்பிற்காகவோ அல்லது வெறும் அலங்காரத்திற்காகவோ மட்டும் இல்லை. இதன் பின்னணியில் வேறு எதாவது காரணம் இல்லாமல் இல்லை.
"வீட்டுல மூணும் ஆம்பள புள்ளையா பொறந்து தொலஞ்சுட்டானுக. ஒரு மஹாலக்ஷ்மி வந்து பொறந்தா நல்லா இருக்கும் னு" சொல்லும்போது வராத ஆண்/பெண் சம பாலின சர்ச்சை, ஒரு ஆம்பள புள்ள வேணும் னு சொல்லும் போது ஒட்டு மொத்த பிரிண்ட் / ஆன்லைன் / சமூக வலைதளம் என திரும்பிய பக்கமெல்லாம் வருவது எதனால்?.
சரி, உண்மையாகவே இந்த போராளிகளின் எண்ணம் ஆண்/பெண் சம பாலினம் எனும் போது அவர்கள் நியாயமாக செய்ய வேண்டியது என்ன?
* அரசியல்வாதிகள் தங்கள் மகளை விட்டுவிட்டு மகனுக்கு மட்டும் பொறுப்பு, பதவி தருவதையும்,
* திரையுலகில் தங்கள் மகனுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து, அவர்களை நடிப்பில் களமிறக்குவதையும்,
* தொழிலதிபர்கள் தங்கள் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்புகளை மகனுக்கே முன்னுரிமை தந்து நியமிப்பதையும்,
* அவ்வளவு ஏன்?, 33 சதவீகித இட ஒதுக்கீட்டுக்கே பெண்கள் இன்னும் போராடிக் கொண்டிருப்பதையும்,
இந்த போராளிகள் என்றாவது கேள்வி கேட்டிருப்பார்களா? சிரஞ்சீவியின் இந்த கருத்துக்கான இவர்களின் கோபம் உண்மையெனில் இவர்களின் கேள்விக்கணைகள் இப்பொழுது சமூகத்தில் மகளை தவிர்த்து மகனை கொண்டாடும் இப்படிப்பட்ட அரசியல்வாதி, திரைத்துறை, தொழிலதிபர்களை நோக்கி அல்லவா இருக்க வேண்டும்? ஆனால் ஒட்டுமொத்த கோபமும் சிரஞ்சீவியை நோக்கி பாய்வது எதனால்?
பெண்ணுரிமைக்காக மற்றும் ஆண்/பெண் சம பாலினதிற்காக போராடும் எத்தனை பேர் உண்மையாகவே வீட்டில் பெண்களுக்கான நியாயமான உரிமையை அனுமதிக்கிறோம்? சமூகத்தில், வீட்டில் என எல்லா இடங்களிலும் நாம் அவர்களை புறக்கணித்தாலும், பெண்களைக் கொண்டாடுவதைப் போலவும் நாம் எப்பொழுதும் பெண்களுக்கு ஆதரவாக இருப்பது போலவும் ஒரு பிம்பத்தை பொதுவெளியில் உருவாக்கிக்கொண்டே இருக்கிறோம். வெறும் இப்படிப்பட்ட பொய்ப் பிம்பங்களினால் என்ன பயன்?.
பொதுவாக, எந்த ஒரு கருத்து/பேச்சு - க்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு இருப்பது இயற்கையே. ஆனால் ஒரு சில கருத்து/பேச்சு - க்கு மட்டும் ஒட்டுமொத்த மக்களும் எதிராக இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவது என்பது தான் மக்களை திசை திருப்புவதில் உள்ள நுண்ணிய அரசியல். இந்த மாதிரியான செய்திகளில் கவனக்குவிப்பு ஏற்படுத்துவது என்பது சில சமயங்களில் கருத்து அடிப்படையில் அமைந்தாலும் பல சமயங்களில் பேசிய மனிதர்களின் அடிப்படியில் அமையும்.
வணிகமயமாகி விட்ட இன்றைய காலகட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களின் இலக்கு. நாம் என்ன சாப்பிட வேண்டும், என்ன படிக்க வேண்டும், எதை பார்க்க வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதையும் தாண்டி என்ன சிந்திக்க வேண்டும் என்பதையும் வணிக நிறுவனங்கள் தான் முடிவு செய்கின்றன.
ஆகவே, நீரை பிரித்து பாலை பருகும் அன்னப்பறவை போல தேவையற்ற செய்திகளை புறந்தள்ளி நமக்கு பயனுள்ள செய்திகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டியது நமது பொறுப்பு.
இந்த கட்டுரை நடிகர் சிரஞ்சீவி - கான ஆதரவு/எதிர்ப்பு பதிவு அல்ல. நாம் எதைப்பற்றி யோசிக்க வேண்டும், நம்முடைய சிந்தனை முழுவதும் எதைப்பற்றி இருக்க வேண்டும் என திட்டமிட்டு செய்யும் நுண்ணிய அரசியலுக்கு எதிரானது. நமது கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடுவது மட்டுமல்ல, நமது கவனத்தை வேறு முக்கியமான செய்திகளில் செல்லவிடாமல் தடுப்பதும் கூட ஒரு வகையான "டிஜிட்டல் அரெஸ்ட்" தான் !!!.
Tags:
#Chiranjeevi #Chiranjeevi controversy #Ram Charan #controversy speech #trending now