Thai Amavasai 2025: ஏன் கடைபிடிக்க வேண்டும் தை அமாவாசை? சிறப்புகள், விரத முறைகள் என்னென்ன?

அமாவாசைகளில் முக்கியமான மற்றும் சிறப்பான ஒன்று தை அமாவாசை. உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை இது என்பதால் இச்சிறப்பை பெறுகிறது. மேலும் வருடத்தில் வரும் மற்ற 23 அமாவாசைகளில் விரதம் இருந்து, முன்னோர்களை வழிபட முடியாதவர்கள் இந்த தை அமாவாசை அன்று மட்டும் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தல் வருடம் முழுவதும் அமாவாசை விரதம் இருந்து முன்னோர்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது காலங்காலமாக உள்ள நம்பிக்கை. அதோடு நாம் செய்த பாவங்கள் மட்டுமின்றி, நம்முடைய ஏழு தலைமுறை முன்னோர்கள் செய்த பாவங்களும் நீங்கும் என்பது கூடுதல் நம்பிக்கை.
இந்த ஆண்டு தை அமாவாசை வரும் ஜனவரி 29ம் தேதி புதன்கிழமை வருகிறது. ஜனவரி 28ம் தேதி இரவு 08.10 மணிக்கு துவங்கி, ஜனவரி 29ம் தேதி இரவு 07.21 வரை அமாவாசை திதி உள்ளது. மேலும் இது பெருமாளுக்கு உகந்த புதன்கிழமை மற்றும் திருவோணம் நட்சத்திரத்துடன் இணைந்து வருவது தனிச்சிறப்பு.
தை அமாவாசையில் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் அளிப்பதுடன் மிக மிக முக்கியமாகதாக கருதப்படுவது ஏழைகளுக்கு நம்மால் முடிந்த பொருட்களை தானமாக அளிப்பதுவே. அவ்வாறு செய்தல் நம் முன்னோர்கள் அகமகிழ்ந்து நம்முடைய பாவங்கள் மட்டுமின்றி, நமக்கு முந்தைய தலைமுறையில் இருந்தவர்கள் செய்த பாவங்கள், பித்ரு காரியங்கள் செய்யாமல் விட்ட குறைகள், தவறுகள் ஆகியன நீங்கி நன்மைகள் அதிகரிக்கும் என்பது ஆழமான நம்பிக்கை.
தை அமாவாசை தினத்தன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளை செய்ய தவறாதீர்கள்.
1. அமாவாசை தோறும் முன்னோர்கள் நம் வீட்டு வாசலில் நின்று கொண்டு எள், தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்கள் என்பது வரலாறு. அதனால் அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் வாசலில் கோலம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.
2. முக்கியமாக இறைச்சி அறவே கூடாது. சமையலில் பூசணிக்காயும் வாழைக்காயும் சேர்த்து சமைக்க வேண்டும். வெங்காயம், பூண்டு தவிர்க்க வேண்டும்.
3. விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் முடிந்தவரை அனைவரிடமும் அன்பாக இருக்க வேண்டும்.
4. முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து, அவர்களுடைய படத்திற்கு அலங்காரம் செய்து அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை சமைத்து படையல் போட்டு வழிபட வேண்டும். அவ்வாறு வழிபட்ட பின்னர் படையலை காகத்திற்கு அளிக்க வேண்டும். காகம் சாப்பிட்டப் பின்னரே அனைவரும் சாப்பிட வேண்டும். சனி பகவானின் வாகனமான காகம் அதை சாப்பிடுவதால் சனி பகவானின் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது முன்னோர்களின் கூற்று.
5. பித்ருக்களுக்கு தெய்வமாக விளங்குபவர் மகாவிஷ்ணு, எனவே பித்ருக்கள் வழிபாட்டின் போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ அல்லது துளசி இலையோ கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
Tags:
#Thai Amavasai 2025 #thai amavasai padayal #தை அமாவாசை 2025 #தை அமாவாசை படையல் #தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நேரம்