ஆண்டாள் திருப்பாவை 25:
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!
பொருள்: "தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்து, அன்றைய இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு ஒளிந்து வளர்ந்தாலும் உன்னை குழந்தை என்றும் பாராமல் நீ வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை பொசுக்கி அவனது வயிற்றில் பயத்தை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது செல்வச் சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடி, எங்கள் துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருக்க உனது அருளை வேண்டி நாங்கள் வந்திருக்கிறோம். எங்களுக்கு அருளுவாயாக.!"
இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.