ஆண்டாள் திருப்பாவை 27:
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!
பொருள்: "எதிரிகள் எத்தனை வல்லவராக இருந்தாலும் அவர்களை அழித்து, தன்னை எதிர்க்க யாருமே இல்லை என வெற்றிகள் அனைத்தையும் உன் வசம் வைத்துள்ள கோவிந்தனே! உன்னை போற்றி புகழ்ந்து, உன்னுடைய கருணையை நாங்கள் பெற்றால் எங்களுக்கு அதை விட மேலான பரிசு வேறொன்றுமில்லை. இந்த பாவை நோன்பினை நிறைவு செய்த பிறகு தலைக்கு சூடகம், கழுத்திற்கு நகைகள், வளையல்கள், காதிற்கு தோடு, இடுப்பிற்கு உரிய அணிகலன் என அனைத்தையும் அணிந்து, கூட்டமாக உன்னுடன் அமர்ந்து முழங்கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்!"
இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.