Maha Shivaratri 2025 | மகா சிவராத்திரி வரலாறு, பூஜை முறை, பலன்கள் - ஒரு முழு வழிகாட்டி #MahaShivaratri

சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சைவ சமய அன்பர்களால் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் அமாவாசைக்கு முதல் நாள் இரவில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் ஒரு உன்னத விரதமே இந்த மகா சிவராத்திரி விரதம்.
மகா சிவராத்திரி 2025 (Maha Shivaratri 2025) எப்போது:
மகா சிவராத்திரி நாள்: 2025, பிப் 26 புதன்கிழமை ( 2025 Feb 26 புதன் காலை 11:08 லிருந்து 2025 Feb 27 வியாழன் காலை 8:54 வரை )
புராணங்களில் மகா சிவராத்திரி:
மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் சிவபெருமானை நினைத்து நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவதன் மூலம் சிவனின் பரிபூரண அனுகிரகத்தைப் பெறலாம் என்கிறது இந்துமதம். இந்த நாளைப் பற்றிய சிறப்புகள் குறித்து திருவிளையாடற் புராணம், கருட புராணம், அக்னி புராணம், கந்த புராணம், பத்ம புராணம் உள்ளிட்ட புராண நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மகா சிவராத்திரி நோன்பு முறைகளைக் கூறும் "மகா சிவராத்திரி கற்பம்" என்னும் நூல், 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தரால் எழுதப்பட்ட 39 குறட்பாக்களைக் கொண்ட ஒரு சிறு நூல். இதுவே இன்றைய மகா சிவராத்திரி விரத முறைகளை வரையறுத்த முக்கிய நூலாக சைவ சமய அன்பர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி வரலாறு ( History of Maha Shivaratri ):
இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில், உலகம் பிரளயம் ஆன போது அதில் இருந்த உயிரினங்கள் அனைத்தும் சிவனிடத்தில் ஒடுங்கின. இதனால் அண்ட பிரமாண்ட உலகம் செயலற்று இருந்தது. அதனால் உலகங்களே தோன்றவில்லை. இதனை கண்ட கருணையே வடிவான அம்பிகை மிகுந்த கவலையடைந்தார்.
இந்நிலையில் உமையவள் அம்பிகை, அண்ட பிரமாண்ட உலகம் மீண்டும் இயங்குவதற்கும் உயிரினங்கள் மீண்டும் தங்கள் செயல்பாட்டில் ஈடுபடவும் வேண்டி பரம்பொருளான சிவபெருமானை நோக்கி இடைவிடாத கடுமையான தவம் செய்தார். அப்போது இறைவன் அம்பிகையின் வலிமையான தவத்தில் மகிழ்ந்து, உயிரிகளை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களை படைத்தருளி உலகை மீண்டும் இயங்க செய்ததாக வரலாறு.
அதனால் மகிழ்ந்த உமையவள் தான் பெற்ற இந்த விரத பலனை அனைவரும் பெற்று வாழ்வில் செழிக்க வேண்டி, சிவபெருமானிடத்தில் தன்னுடைய இந்த தவ காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெற வேண்டும் என்றும் இந்த மகா சிவராத்திரி காலத்தில் விரதமிருந்து வழிபடும் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வேண்டினார். அதை கடைப்பிடிப்பவர்கள் தாங்கள் விரும்பிய எல்லா நலன்களும் பெற்று முக்தியடைய அருளவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அவ்வாறே அருள் புரிவதாக உறுதியளித்தார் பரம்பொருள் பரமசிவன்.
அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் என்று பலர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பங்கள் நிறைவேறப் பெற்றனர். அதன் தொடர்ச்சியாக இந்த விரதம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மகா சிவராத்திரி விரத பலன்கள் ( Benefits of Maha Shivaratri ):
மஹா சிவராத்திரி தினத்தன்று விரதமிருந்து சிவ பெருமானை வழிபட்டால், கவலைகள் அனைத்தும் நீங்கும். காரிய வெற்றியும் ஏற்படும். புண்ணியமும் கூடும். பொருளாதார நிலை உயரும். அது மட்டுமன்றி ஒரு ஆண்டு முழுதும் விரதமிருந்து சிவனை வழிபட்ட பலனை இந்த ஒரே நாளில் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம் பெறலாம் என்பது ஆன்றோர் அனுபவம். அதனால் தான் இந்த மாசி மாத சிவராத்திரி "மகா சிவராத்திரி" என்ற சிறப்பை பெற்றுள்ளது.
மகா சிவராத்திரி விரதம் கடைபிடிக்கும் முறை ( How to fast on Maha Shivaratri ):
விரதம் இருக்க நினைப்பவர்கள் சிவராத்திரி தினத்தன்று பகலில் ஒரு பொழுது மட்டும் உணவருந்தி அன்றைய தினம் இரவு முழுவதும் உபவாசமாய் சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டும். வீட்டிலும் இந்த நான்கு கால அபிசேக பூஜை மற்றும் வழிபாடு செய்யலாம். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்து அடியார்களோடு சேர்ந்து உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
வழிபாட்டில் அவசியம் இருக்க வேண்டிய பூஜை பொருட்கள் ( Maha Shivaratri Pooja items ):
அபிஷேகத்திற்கு : பால், சந்தனம், விபூதி, பன்னீர், மஞ்சள், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், வெட்டி வேர், வில்வ இலை முக்கியம்.
அர்ச்சனை மற்றும் அலங்கார பூஜைக்கு: வில்வ இலை முக்கியம்.
பூஜை செய்யும் முறை ( How to perform Maha Shivaratri Pooja ):
- நான்கு யாமங்களிலும் அபிஷேகம், அலங்காரம், நைவேத்யம், அர்ச்சனை அவசியம். அதன்படி,
* முதலில், சிவ லிங்கம் மேல் வில்வ இலையைப் போட்டு அபிஷேக பொருள்களால் நமசிவாய என்ற மந்திரத்தை சொல்லிய படியே திருமஞ்சன அபிஷேகம் செய்ய வேண்டும்.
* பிறகு, சிவ லிங்கத்திற்கு பட்டு வஸ்திரம் அணிவித்து, வில்வ இலை மற்றும் மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
* நைவேத்தியம் படைத்து நமசிவாய என்ற மந்திரத்தை சொல்லிய படியே பூஜை செய்ய வேண்டும்.
* பிறகு சிவ பதிகங்கள் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.
இந்த வழிபாட்டு முறையை நான்கு யாமங்களிலும் பின்பற்ற வேண்டும்.
நான்கு யாமங்கள்:
முதல் யாமம்: ( இரவு 8 மணி):
வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்
அபிஷேகம் - பஞ்சகவ்யம்
அலங்காரம் - வில்வம்
அர்ச்சனை - தாமரை, அலரி
நிவேதனம் - பால் அன்னம், சக்கரைபொங்கல்
பழம் - வில்வம்
பட்டு - செம்பட்டு
தோத்திரம் - இருக்கு வேதம், சிவபுராணம்
மணம் - பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்
புகை - சாம்பிராணி, சந்தணக்கட்டை
ஒளி - புட்பதீபம்
இரண்டாம் யாமம்: (நள்ளிரவு 12 மணி):
வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்
அபிஷேகம் - பஞ்சாமிர்தம்
அலங்காரம் - குருந்தை
அர்ச்சனை - துளசி
நிவேதனம் - பாயசம், சர்க்கரைப் பொங்கல்
பழம் - பலா
பட்டு - மஞ்சள் பட்டு
தோத்திரம் - யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்
மணம் - அகில், சந்தனம்
புகை - சாம்பிராணி, குங்குமம்
ஒளி - நட்சத்திர தீபம்
மூன்றாம் யாமம்: ( பிரம்ம முகூர்த்த நேரம் : 3:30 ):
வழிபட வேண்டிய மூர்த்தம் - இலிங்கோற்பவர்
அபிஷேகம் - தேன், பாலோதகம்
அலங்காரம் - கிளுவை, விளா
அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம், சாதி மலர்
நிவேதனம் - எள்அன்னம்
பழம் - மாதுளம்
பட்டு - வெண் பட்டு
தோத்திரம் - சாம வேதம், திருவண்டப்பகுதி
மணம் - கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
புகை - மேகம், கருங் குங்கிலியம்
ஒளி- ஐதுமுக தீபம்
நான்காம் யாமம்: (அதிகாலை 5:00 மணி):
வழிபட வேண்டிய மூர்த்தம் - சந்திரசேகரர்(இடபரூபர்)
அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்
அலங்காரம் - கரு நொச்சி
அர்ச்சனை - நந்தியாவட்டை
நிவேதனம் - வெண்சாதம்
பழம் - நானாவித பழங்கள்
பட்டு - நீலப் பட்டு
தோத்திரம் - அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
மணம் - புணுகு சேர்ந்த சந்தணம்
புகை - கர்ப்பூரம், இலவங்கம்
ஒளி - மூன்று முக தீபம்
இறுதியாக குலதெய்வ வழிபாடு செய்து வழிபட வேண்டும். இத்துடன் சிவராத்திரி நான்கு யாம பூஜை நிறைவு பெரும். அதன் பின் மீண்டும் நீராடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களோடு சேர்ந்து உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
இவ்வாறாக விரதம் இருந்து, பூஜை செய்து சிவ பெருமானை வழிபட்டு அம்பிகை, நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் என்று பலன் பெற்றோர் வரிசையில் நாமும் இணைவோமாக!!!!
ஓம் நமசிவாய !!!
Tags:
#maha shivaratri #maha shivaratri 2025 #maha shivaratri pooja procedure #History of Maha Shivaratri #Benefits of Maha Shivaratri