திருக்குறள் - வான்சிறப்பு

அறத்துப்பால் - பாயிரம் - வான்சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.   (௰௧ - 11) 

மழை பெய்வதனாலேதான் உலக உயிர்கள் வாழ்கின்றன; ஆதலால், மழையே உயிர்களுக்கு ‘அமிழ்தம்’ என்று உணரத்தகும் (௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும் (௰௧)
—மு. வரதராசன்

உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம் (௰௧)
—சாலமன் பாப்பையா

உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது (௰௧)
—மு. கருணாநிதி


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.   (௰௨ - 12) 

உண்பவர்க்குத் தகுந்த பொருள்களை விளை வித்துத் தந்து அவற்றைப் பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக (பருகும் நீராக) விளங்குவதும் மழையே ஆகும் (௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும் (௰௨)
—மு. வரதராசன்

நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே (௰௨)
—சாலமன் பாப்பையா

யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது (௰௨)
—மு. கருணாநிதி


விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.   (௰௩ - 13) 

மழை காலத்தால் பெய்யாது, பொய்க்குமானால், கடலால் சூழப்பட்டுள்ள இப்பரந்த உலகினுள் பசி நிலைபெற்று உயிர்களை வாட்டும் (௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும் (௰௩)
—மு. வரதராசன்

உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும் (௰௩)
—சாலமன் பாப்பையா

கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும் (௰௩)
—மு. கருணாநிதி


ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.   (௰௪ - 14) 

‘மழை’ என்னும் வருவாயின் வளம் குறைந்ததனால், பயிர் செய்யும் உழவரும் (விளை பொருள்களை விளைவிக்க) ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்கள் (௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார் (௰௪)
—மு. வரதராசன்

மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார் (௰௪)
—சாலமன் பாப்பையா

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும் (௰௪)
—மு. கருணாநிதி


கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.   (௰௫ - 15) 

காலத்தால் பெய்யாது உலகில் வாழும் உயிர்களைக் கெடுப்பதும் மழை; அப்படி கெட்டவற்றைப் பெய்து வாழச் செய்வதும் மழையே ஆகும் (௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும் (௰௫)
—மு. வரதராசன்

பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான் (௰௫)
—சாலமன் பாப்பையா

பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும் (௰௫)
—மு. கருணாநிதி


விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.   (௰௬ - 16) 

வானிலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகில், பசும்புல்லின் தலையைக் காண்பதுங் கூட அருமையாகி விடும் (௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது (௰௬)
—மு. வரதராசன்

மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும் (௰௬)
—சாலமன் பாப்பையா

விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும் (௰௬)
—மு. கருணாநிதி


நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.   (௰௭ - 17) 

மேகமானது கடல் நீரை முகந்து சென்று மீண்டும், மழையாகப் பெய்யாவிட்டால் அப்பெரிய கடலும் தன் வளமையில் குறைந்து போகும் (௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும் (௰௭)
—மு. வரதராசன்

பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும் (௰௭)
—சாலமன் பாப்பையா

ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும் (௰௭)
—மு. கருணாநிதி


சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.   (௰௮ - 18) 

மழையானது முறையாகப் பெய்யாவிட்டால், உலகத்திலே, வானோர்க்காக நடத்தப்படும் திருவிழாக்களும், பூசனைகளும் நடைபெறமாட்டா (௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது (௰௮)
—மு. வரதராசன்

மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது (௰௮)
—சாலமன் பாப்பையா

வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது? (௰௮)
—மு. கருணாநிதி


தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.   (௰௯ - 19) 

மழை பெய்து உதவாவிட்டால், இந்தப் பரந்த உலகத்திலே பிறருக்காகச் செய்யப்படும் தானமும், தனக்காக மேற்கொள்ளும் தவமும் இரண்டுமே நிலையாமற் போய்விடும் (௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும். (௰௯)
—மு. வரதராசன்

மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது. (௰௯)
—சாலமன் பாப்பையா

இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும் (௰௯)
—மு. கருணாநிதி


நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.   (௨௰ - 20) 

நீர் இல்லாமல் எத்தகையோருக்கும் உலக வாழ்க்கை அமையாது என்றால், மழை இல்லாமல் ஒழுக்கமும் நிலைபெறாது (௨௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும் (௨௰)
—மு. வரதராசன்

எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது (௨௰)
—சாலமன் பாப்பையா

உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும் (௨௰)
—மு. கருணாநிதி


Trending now

We @ Social Media