திருக்குறள் - பொழுதுகண்டு இரங்கல்

காமத்துப்பால் - கற்பியல் - பொழுதுகண்டு இரங்கல்

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.   (௲௨௱௨௰௧ - 1221) 

பொழுதே! நீ மாலைக் காலமே அல்லை; காதலரோடு கூடியிருந்து, பிறகு பிரிவால் கலங்கியிருக்கும் மகளிரின் உயிரையுண்ணும் முடிவு காலமே ஆவாய்! (௲௨௱௨௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்! (௲௨௱௨௰௧)
—மு. வரதராசன்

பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ. (௲௨௱௨௰௧)
—சாலமன் பாப்பையா

நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து! (௲௨௱௨௰௧)
—மு. கருணாநிதி


புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.   (௲௨௱௨௰௨ - 1222) 

மயங்கிய மாலைப்பொழுதே! எம்மைப்போலவே நீயும் துன்பமுற்றுத் தோன்றுகிறாயே! நின் துணையும் என் காதலரைப் போலவே இரக்கம் இல்லாததோ! (௲௨௱௨௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மயங்கிய மாலைப்‌பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்‌றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ? (௲௨௱௨௰௨)
—மு. வரதராசன்

பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ? (௲௨௱௨௰௨)
—சாலமன் பாப்பையா

மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ? (௲௨௱௨௰௨)
—மு. கருணாநிதி


பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.   (௲௨௱௨௰௩ - 1223) 

பனி தோன்றிப் பசந்துவந்த மாலைக் காலமானது, எனக்கு வருத்தம் தோன்றி மென்மேலும் வளரும்படியாகவே இப்போது வருகின்றது போலும்! (௲௨௱௨௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது. (௲௨௱௨௰௩)
—மு. வரதராசன்

அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது. (௲௨௱௨௰௩)
—சாலமன் பாப்பையா

பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது (௲௨௱௨௰௩)
—மு. கருணாநிதி


காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.   (௲௨௱௨௰௪ - 1224) 

காதலர் அருகே இல்லாத போது, கொலை செய்யும் இடத்திலே ஆறலைப்பார் வருவதைப் போல, இம் மாலையும் என் உயிரைக் கொல்வதற்காகவே வருகின்றதே! (௲௨௱௨௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது. (௲௨௱௨௰௪)
—மு. வரதராசன்

அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது. (௲௨௱௨௰௪)
—சாலமன் பாப்பையா

காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது (௲௨௱௨௰௪)
—மு. கருணாநிதி


காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.   (௲௨௱௨௰௫ - 1225) 

காலைப் பொழுதுக்கு யான் செய்த நன்மைதான் யாது? என்னை இப்படிப் பெரிதும் வருத்துகின்ற மாலைப் பொழுதுக்கு யான் செய்த தீமையும் யாதோ? (௲௨௱௨௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன? (௲௨௱௨௰௫)
—மு. வரதராசன்

காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன? (௲௨௱௨௰௫)
—சாலமன் பாப்பையா

மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் ``காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன?'' என்று புலம்புகிறது (௲௨௱௨௰௫)
—மு. கருணாநிதி


மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.   (௲௨௱௨௰௬ - 1226) 

மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்யும் என்பதை, காதலர் என்னை விட்டுப் பிரியாமல் கூடியிருந்த அந்தக் காலத்தில் யான் அறியவே இல்லையே! (௲௨௱௨௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை. (௲௨௱௨௰௬)
—மு. வரதராசன்

முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை. (௲௨௱௨௰௬)
—சாலமன் பாப்பையா

மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை (௲௨௱௨௰௬)
—மு. கருணாநிதி


காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.   (௲௨௱௨௰௭ - 1227) 

காலையிலே அரும்பாகித் தோன்றி, பகலெல்லாம் பேரரும்பாக வளர்ந்து, மாலைப் பொழுதிலே மலர்ந்து மலராக விரிகின்றது (௲௨௱௨௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது. (௲௨௱௨௰௭)
—மு. வரதராசன்

காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது. (௲௨௱௨௰௭)
—சாலமன் பாப்பையா

காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும் (௲௨௱௨௰௭)
—மு. கருணாநிதி


அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.   (௲௨௱௨௰௮ - 1228) 

நெருப்பைப் போலச் சுடுகின்ற மாலைப் பொழுதுக்குத் தூதாகி, ஆயனுடைய புல்லாங்குழலின் இசையும், என்னைக் கொல்லும் படையாக வருகின்றதே! (௲௨௱௨௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது. (௲௨௱௨௰௮)
—மு. வரதராசன்

முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது. (௲௨௱௨௰௮)
—சாலமன் பாப்பையா

காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது (௲௨௱௨௰௮)
—மு. கருணாநிதி


பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.   (௲௨௱௨௰௯ - 1229) 

அறிவு மயங்கும் படியாக மாலைப்பொழுது வந்து படர்கின்ற இப்பொழுதிலே, இந்த ஊரும் மயங்கியதாய், என்னைப் போலத் துன்பத்தை அடையும் (௲௨௱௨௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும். (௲௨௱௨௰௯)
—மு. வரதராசன்

இதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி மயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது இந்த ஊரே மயங்கித் துன்பப்படும். (௲௨௱௨௰௯)
—சாலமன் பாப்பையா

என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது (௲௨௱௨௰௯)
—மு. கருணாநிதி


பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.   (௲௨௱௩௰ - 1230) 

பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைத்து, பிரிவுத் துன்பத்தாலே போகாமல் நின்ற என் உயிரானது, இம் மாலைப் பொழுதில் நலிவுற்று மாய்கின்றதே! (௲௨௱௩௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது. (௲௨௱௩௰)
—மு. வரதராசன்

அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது. (௲௨௱௩௰)
—சாலமன் பாப்பையா

பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது (௲௨௱௩௰)
—மு. கருணாநிதி


Trending now

We @ Social Media