காமத்துப்பால் - களவியல் - நாணுத் துறவுரைத்தல்
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி. (௲௱௩௰௧ - 1131)
காம நோயால் துன்புற்று, தம் காதலியின் அன்பைப் பெறாமல் வருந்தியவருக்கு வலிமையான பாதுகாப்பு, ‘மடலேறுதல்’ அல்லாமல், வேறு யாதும் இல்லை (௲௱௩௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை. (௲௱௩௰௧)
—மு. வரதராசன்
காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை. (௲௱௩௰௧)
—சாலமன் பாப்பையா
காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை (௲௱௩௰௧)
—மு. கருணாநிதி
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து. (௲௱௩௰௨ - 1132)
காதலியின் அன்பைப் பெறாத துயரத்தைத் தாங்கமுடியாத என் உடம்பும் உயிரும், நாணத்தை என்னிடமிருந்து நீக்கி நிறுத்திவிட்டு, மடலூரத் துணிந்துவிட்டன (௲௱௩௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன. (௲௱௩௰௨)
—மு. வரதராசன்
காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன. (௲௱௩௰௨)
—சாலமன் பாப்பையா
எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன் (௲௱௩௰௨)
—மு. கருணாநிதி
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல். (௲௱௩௰௩ - 1133)
நாணத்தையும் நல்ல ஆண்மையையும் முன்னர்ப் பெற்றிருந்தேன்; இப்பொழுதோ பிரிவுத் துயரால் காமநோய் மிகுந்தவர் ஏறும் மடலையே பெற்றுள்ளேன் (௲௱௩௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன். (௲௱௩௰௩)
—மு. வரதராசன்
நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன். (௲௱௩௰௩)
—சாலமன் பாப்பையா
நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன் (௲௱௩௰௩)
—மு. கருணாநிதி
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை. (௲௱௩௰௪ - 1134)
நாணத்தோடு நல்லாண்மையும் ஆகிய தோணிகளைக் காமநோய் என்கின்ற கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போகின்றதே! என்ன செய்வேன்! (௲௱௩௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன. (௲௱௩௰௪)
—மு. வரதராசன்
ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது. (௲௱௩௰௪)
—சாலமன் பாப்பையா
காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது (௲௱௩௰௪)
—மு. கருணாநிதி
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர். (௲௱௩௰௫ - 1135)
தொடர்பான குறுவளையல்களை அணிந்த இவள் தான், மாலைப் பொழுதிலே வருந்தும் துயரத்தையும், மடலேறும் நிலைமையையும் எனக்கு தந்துவிட்டாளே! (௲௱௩௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள். (௲௱௩௰௫)
—மு. வரதராசன்
மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள். (௲௱௩௰௫)
—சாலமன் பாப்பையா
மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள் (௲௱௩௰௫)
—மு. கருணாநிதி
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண். (௲௱௩௰௬ - 1136)
அப் பேதையின் பொருட்டாக என் கண்கள் ஒரு போதும் மூடுதலைச் செய்யமாட்டா; அதனால், இரவின் நடுச்சாம வேளையிலும் மடலேறுதலையே நான் நினைத்திருப்பேன்! (௲௱௩௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன. (௲௱௩௰௬)
—மு. வரதராசன்
அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன். (௲௱௩௰௬)
—சாலமன் பாப்பையா
காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன் (௲௱௩௰௬)
—மு. கருணாநிதி
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில். (௲௱௩௰௭ - 1137)
கடலைப் போன்ற காம நோயால் வருத்தமடைந்த போதும், மடலேறாமல், தன் துயரத்தைப் பொறுத்திருக்கும் பெண்ணைப் போன்ற பெருந்தகுதி ஆணுக்கு இல்லை (௲௱௩௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை. (௲௱௩௰௭)
—மு. வரதராசன்
அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை. (௲௱௩௰௭)
—சாலமன் பாப்பையா
கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை (௲௱௩௰௭)
—மு. கருணாநிதி
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும். (௲௱௩௰௮ - 1138)
‘நிறை இல்லாதவர் இவர்’ என்றும், ‘இரங்கத்தவர் இவர்’ என்றும் பாராது, காமநோயானது, மறைப்பைக் கடந்து, மன்றத்தில் தானாக வெளிப்படுகின்றதே! (௲௱௩௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே. (௲௱௩௰௮)
—மு. வரதராசன்
இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது. (௲௱௩௰௮)
—சாலமன் பாப்பையா
பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல் (௲௱௩௰௮)
—மு. கருணாநிதி
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு. (௲௱௩௰௯ - 1139)
பொறுத்திருந்ததனாலே எல்லாரும் அறிந்தாரில்லை என்று நினைத்தே, என் காமநோயானது, இவ்வாறு தெருவிலே பலரும் அறியுமாறு மயங்கித் திருகின்றது போலும்! (௲௱௩௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது. (௲௱௩௰௯)
—மு. வரதராசன்
என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது. (௲௱௩௰௯)
—சாலமன் பாப்பையா
என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்! (௲௱௩௰௯)
—மு. கருணாநிதி
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு. (௲௱௪௰ - 1140)
யாம் பட்ட இந்தப் பிரிவுத் துன்பத்தை அவர்களும் அடையாததாலேதான், அறிவில்லாதவர், யாம் கண்ணாற் காணும்படியாக எம் எதிரே நின்று சிரிக்கின்றனர் (௲௱௪௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர். (௲௱௪௰)
—மு. வரதராசன்
நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே! (௲௱௪௰)
—சாலமன் பாப்பையா
காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள் (௲௱௪௰)
—மு. கருணாநிதி