திருக்குறள் - அரண்

பொருட்பால் - அரணியல் - அரண்

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.   (௭௱௪௰௧ - 741) 

பகைவருக்கு அஞ்சாமல் மேற்சென்று போரிட வல்லவர்களுக்கும் அரண் செல்வம்; அஞ்சி உள்ளேயிருந்து தம்மைக் காத்துக் கொள்ள நினைப்பவருக்கும் அரண் செல்வம் (௭௱௪௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

(படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும். (௭௱௪௰௧)
—மு. வரதராசன்

பிறர்மேல் படை எடுத்துச் செல்பவர்க்கும் சிறந்தது அரண்; பிறருக்குப் பயந்து உள்ளிருப்பவர்க்கும் அதுவே சிறந்தது. (௭௱௪௰௧)
—சாலமன் பாப்பையா

பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும் (௭௱௪௰௧)
—மு. கருணாநிதி


மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.   (௭௱௪௰௨ - 742) 

நீலமணி போன்ற நீரினையுடைய அகழியும், வெளியான நிலப்பரப்பும், உயரமான மலையும், மரநிழலாற் செறிந்த காடும் கொண்டுள்ளதே, பாதுகாப்பான நல்ல அரண்! (௭௱௪௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும். (௭௱௪௰௨)
—மு. வரதராசன்

தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும். (௭௱௪௰௨)
—சாலமன் பாப்பையா

ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும் (௭௱௪௰௨)
—மு. கருணாநிதி


உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.   (௭௱௪௰௩ - 743) 

‘உயரமும், அகலமும், உறுதியும், பகைவரால் நெருங்குவதற்கு அருமையும் என்னும் நான்கும், சிறப்பாக அமைந்ததே அரண்’ என்று போரியல் நூல்கள் கூறும் (௭௱௪௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர். (௭௱௪௰௩)
—மு. வரதராசன்

பகைவர் ஏற முடியாத உயரம், காவலர் நிற்க இயங்க வசதியான அகலம், இடிக்கமுடியாத வலிமை, கடக்க முடியாத பொறிகளின் அருமை, இந்நான்கையும் மிகுதியாக உடைய கோட்டையையே செயற்கை அரண் என்று நூல்கள் கூறும். (௭௱௪௰௩)
—சாலமன் பாப்பையா

உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும் (௭௱௪௰௩)
—மு. கருணாநிதி


சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.   (௭௱௪௰௪ - 744) 

காக்க வேண்டும் இடத்தினால் சிறிதானதாகவும், உள்ளே பெரிதான பரப்பை உடையதாகவும், பகைவரது மன ஊக்கத்தை முற்றும் அழிக்க வல்லதே நல்ல அரண் ஆகும் (௭௱௪௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும். (௭௱௪௰௪)
—மு. வரதராசன்

காவல் செய்யவேண்டிய இடம் சிறியதாயும், கோட்டையின் சுற்றுப் பெரியதாயும், சண்டையிட வரும் பகைவர்க்கு மலைப்பைத் தருவதாயும் அமைவது அரண். (௭௱௪௰௪)
—சாலமன் பாப்பையா

உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும் (௭௱௪௰௪)
—மு. கருணாநிதி


கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.   (௭௱௪௰௫ - 745) 

பகைவராலே கைப்பற்றுவதற்கு அரியதாயும், தன்னிடத்தே கொண்டுள்ள உணவுப் பொருள்களை உடையதாயும், அகத்தாரது போர்நிலைக்கு எளியதாயும் அமைந்ததே அரண் (௭௱௪௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண். (௭௱௪௰௫)
—மு. வரதராசன்

பலநாள் முற்றுகையிட்டாலும் பகைவரால் கைப்பற்ற முடியாதது ஆகி, உள்ளிருப்பார்க்கு வேண்டிய உணவையும் உடையதாய் உள்ளிருப்போர் போரிட வாய்ப்பாகவும் இருப்பதே அரண். (௭௱௪௰௫)
—சாலமன் பாப்பையா

முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும் (௭௱௪௰௫)
—மு. கருணாநிதி


எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.   (௭௱௪௰௬ - 746) 

அகத்தாருக்குத் தேவையான எல்லாம் பொருள்களையும் உடையதாய், அழிவிடத்து உதவிக்காக்கும் நல்ல காவல் மறவர்களையும் கொண்டதாய், விளங்குவதே அரண் (௭௱௪௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும். (௭௱௪௰௬)
—மு. வரதராசன்

உள்ளிருப்போர்க்குத் தேவையான பொருள் எல்லாம் இருப்பதாய், வெளியே இருந்து அழிக்க முயலும் பகைவரை வெல்ல உதவும் வீரரைப் பெற்றதாய் இருப்பதே அரண். (௭௱௪௰௬)
—சாலமன் பாப்பையா

போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும் (௭௱௪௰௬)
—மு. கருணாநிதி


முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.   (௭௱௪௰௭ - 747) 

சூழ்ந்து முற்றியும், திடீரெனத் தாக்கியும், வஞ்சனைகளாலே உள்ளிருப்போரை வசப்படுத்தியும், பகைவரால் கைப்பற்றுவதற்கு இயலாத அருமையுடையதே அரண்! (௭௱௪௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும். (௭௱௪௰௭)
—மு. வரதராசன்

முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டாலும் சூழாமல் வலு இழந்த இடத்தில் நெருங்கிப் போரிட்டாலும் உள்ளிருப்போரில் சிலரை ஐந்தாம் படை ஆக்கினாலும், பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதே அரண். (௭௱௪௰௭)
—சாலமன் பாப்பையா

முற்றுகையிட்டோ, முற்கையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும் (௭௱௪௰௭)
—மு. கருணாநிதி


முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.   (௭௱௪௰௮ - 748) 

வந்து சூழ்ந்துள்ள பகைவரது பெரும்படையையும், உள்ளிருப்போர் இடம்விட்டுப் பெயராமல் நிலைத்து நின்றபடியே வெல்லும் அமைப்பை உடையதே, அரண் (௭௱௪௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும். (௭௱௪௰௮)
—மு. வரதராசன்

கோட்டைக்குள் இருப்போர் தாம் இருக்கும். இடத்தை விட்டுவிடாமல் நின்று படைமிகுதியால் சூழ்ந்து கொண்ட பகைவரையும் பொருது, வெல்வதே அரண். (௭௱௪௰௮)
—சாலமன் பாப்பையா

முற்றுகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும் (௭௱௪௰௮)
—மு. கருணாநிதி


முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.   (௭௱௪௰௯ - 749) 

முற்றுகையிட்ட பகைவர்கள் போர்முனையின் முகப்பிலேயே அழிந்து போகுமாறு, போர்த்தொழிலில் வீறுபெற்றுச் சிறந்த காவல் மறவர்களையும் கொண்டதே அரண்! (௭௱௪௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும். (௭௱௪௰௯)
—மு. வரதராசன்

போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண். (௭௱௪௰௯)
—சாலமன் பாப்பையா

போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்nயிருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும் (௭௱௪௰௯)
—மு. கருணாநிதி


எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.   (௭௱௫௰ - 750) 

எத்தகைய பாதுகாவலை உடையதாய் இருந்தாலும், அரண்காக்கும் மறவர்கள் போர்வினைச் சிறப்பு இல்லாதவரானால், அந்த அரணும் பயனற்று அழிந்து போகும் (௭௱௫௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை (௭௱௫௰)
—மு. வரதராசன்

எத்தனை சிறப்புகளை உடையது என்றாலும் வெல்லும் பகை அறிந்து செயல்படும் திறம் இல்லாதவர் இருந்தால், அரண் இருந்தும் இல்லாததே ஆகும். (௭௱௫௰)
—சாலமன் பாப்பையா

கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது (௭௱௫௰)
—மு. கருணாநிதி


Trending now

We @ Social Media