காமத்துப்பால் - கற்பியல் - உறுப்புநலன் அழிதல்
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண். (௲௨௱௩௰௧ - 1231)
இந்தத் துன்பத்தை நமக்கு விட்டுவிட்டுத் தொலைவாகச் சென்றுவிட்ட காதலரை நினைத்து அழுவதனாலே, என் கண்கள், தம் அழகிழந்து நறுமலர்களுக்கு நாணின (௲௨௱௩௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன. (௲௨௱௩௰௧)
—மு. வரதராசன்
பிரிவைப் பொறுக்காத சிறுமை என்னோடு இருக்கப் பிரிவைப் பொறுத்துக் கொண்டு தொலைவில் சென்று அவரை எண்ணி அழுவதால், கண்கள் ஒளி இழந்துவிட்டன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட மண மலர்களுக்கு இப்போது கண்கள் வெட்கப்பட்டுவிட்டன. (௲௨௱௩௰௧)
—சாலமன் பாப்பையா
பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன (௲௨௱௩௰௧)
—மு. கருணாநிதி
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண். (௲௨௱௩௰௨ - 1232)
பசலை நிறத்தைப் பெற்று நீரைச் சொரியும் கண்கள், நம்மை முன்பு விரும்பிய நம் காதலர், இப்போது அன்பு செய்யாததைப் பிறருக்கும் சொல்வன போல் உள்ளனவே! (௲௨௱௩௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன. (௲௨௱௩௰௨)
—மு. வரதராசன்
பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்! (௲௨௱௩௰௨)
—சாலமன் பாப்பையா
பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன (௲௨௱௩௰௨)
—மு. கருணாநிதி
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள். (௲௨௱௩௰௩ - 1233)
காதலரோடு கூடியிருந்த நாட்களிலே பூரித்திருந்த தோள்கள் மெலிவடைந்து, அவருடைய பிரிவைப் பிறருக்கு நன்றாகத் தெரிவிப்பவை போல் உள்ளனவே! (௲௨௱௩௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன. (௲௨௱௩௰௩)
—மு. வரதராசன்
அவர் என்னை மணந்தபோது இன்பத்தால் பருத்த என் தோள்கள், இன்று மெலிந்து அவர் என்னைப் பிரிந்திருப்பதை மற்றவர்க்குத் தெரிவிக்கும். (௲௨௱௩௰௩)
—சாலமன் பாப்பையா
தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும் (௲௨௱௩௰௩)
—மு. கருணாநிதி
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள். (௲௨௱௩௰௪ - 1234)
தமக்கு துணையான காதலரைப் பிரிந்ததால், தம் பழைய அழகுகெட்டு வாடிய தோள்கள், தம் பசிய தொடிகளையும் சுழலச் செய்கின்றனவே! (௲௨௱௩௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன. (௲௨௱௩௰௪)
—மு. வரதராசன்
அவர் என்னைப் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த என் தோள்கள், இப்போது வளையல்களும் கழலும்படி மெலிந்திருக்கின்றன. (௲௨௱௩௰௪)
—சாலமன் பாப்பையா
பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக (௲௨௱௩௰௪)
—மு. கருணாநிதி
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள். (௲௨௱௩௰௫ - 1235)
தொடிகளும் கழன்று வீழ, தம் பழைய அழகும் கெட்டுப் போன தோள்கள், நம் துன்பத்தை அறியாத கொடியவரின் கொடுமையை ஊரறியச் சொல்கின்றனவே! (௲௨௱௩௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன. (௲௨௱௩௰௫)
—மு. வரதராசன்
வளையல்கள் கழல, முன்னைய இயற்கை அழகையும் இழந்த என் தோள்கள் கொடிய அவரின் கொடுமையைப் பேசுகின்றன. (௲௨௱௩௰௫)
—சாலமன் பாப்பையா
வளையல்களும் கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன (௲௨௱௩௰௫)
—மு. கருணாநிதி
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து. (௲௨௱௩௰௬ - 1236)
தொடிகள் கழன்று வீழ்ந்து, தோள்களும் மெலிந்ததனால், காண்பவர் மனம் நொந்தவராக, அவரைக் ‘கொடியவர்’ என்று கூறக்கேட்டு, யானும் வருந்துவேனே! (௲௨௱௩௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன். (௲௨௱௩௰௬)
—மு. வரதராசன்
வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன். (௲௨௱௩௰௬)
—சாலமன் பாப்பையா
என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன் (௲௨௱௩௰௬)
—மு. கருணாநிதி
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து. (௲௨௱௩௰௭ - 1237)
நெஞ்சமே! கொடியவராகிவிட்ட காதலருக்கு என் வாடிய தோள்களின் ஆரவாரத்தை எடுத்துச் சொல்லி உதவியைச் செய்ததனால், நீயும் பெருமை அடையாயோ! (௲௨௱௩௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ? (௲௨௱௩௰௭)
—மு. வரதராசன்
நெஞ்சே! கொடுமையானவராகிய அவரிடம் சென்று என் மெலியும் தோள்களினால் ஏற்பட்டுள்ள வெற்றுரைகளைச் சொல்லி நீ பெருமை பெறுவாயோ? (௲௨௱௩௰௭)
—சாலமன் பாப்பையா
நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ? (௲௨௱௩௰௭)
—மு. கருணாநிதி
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல். (௲௨௱௩௰௮ - 1238)
தழுவியிருந்த கைகளைத் தளர்த்திய அப்பொழுதிலேயே, பசிய தொடியணிந்த இப் பேதைமை உடையவளின் நெற்றியும் பசலை நிறத்தை அடைந்துவிட்டதே! (௲௨௱௩௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தழுவிய கைகளைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது. (௲௨௱௩௰௮)
—மு. வரதராசன்
முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே! (௲௨௱௩௰௮)
—சாலமன் பாப்பையா
இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது (௲௨௱௩௰௮)
—மு. கருணாநிதி
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண். (௲௨௱௩௰௯ - 1239)
முயக்கத்திற்கு இடையே குளிர்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிதான மழை போன்ற கண்களும் அழகிழந்து, பசலை நிறம் அடைந்து விட்டனவே! (௲௨௱௩௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன. (௲௨௱௩௰௯)
—மு. வரதராசன்
(அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் இழந்தன. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ? (௲௨௱௩௰௯)
—சாலமன் பாப்பையா
இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன (௲௨௱௩௰௯)
—மு. கருணாநிதி
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு. (௲௨௱௪௰ - 1240)
காதலியின் ஒளியுள்ள நெற்றி பசலை நிறம் அடைந்ததைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலை நிறமும் மேலும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது! (௲௨௱௪௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது. (௲௨௱௪௰)
—மு. வரதராசன்
குளிர்ந்த சிறுகாற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, நிற வேறுபாடு அடைந்தது. அதன் மென்மையைப் பார்த்து வெட்கப்பட்ட கண்ணும் துன்பம் உற்றதே! (௲௨௱௪௰)
—சாலமன் பாப்பையா
பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது (௲௨௱௪௰)
—மு. கருணாநிதி