திருக்குறள் - பிரிவாற்றாமை

காமத்துப்பால் - கற்பியல் - பிரிவாற்றாமை

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.   (௲௱௫௰௧ - 1151) 

பிரிந்து செல்லாமை உண்டானால் எனக்குச் சொல்வாயாக; பிரிந்து போய் விரைந்து திரும்பி வருவது பற்றியானால், அது வரையிலும் வாழ்ந்திருப்பவருக்குச் சொல்வாயாக (௲௱௫௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல். (௲௱௫௰௧)
—மு. வரதராசன்

என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல். (௲௱௫௰௧)
—சாலமன் பாப்பையா

பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல் நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக் கொள் (௲௱௫௰௧)
—மு. கருணாநிதி


இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.   (௲௱௫௰௨ - 1152) 

அவர் அன்பான பார்வையும் முன்னர் இனிதாய் இருந்தது; இப்பொழுதோ, பிரிவை நினைத்து அஞ்சுகின்ற துன்பத்தால், அவர் கூடுதலும் துன்பமாகத் தோன்றுகின்றது (௲௱௫௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது, இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது. (௲௱௫௰௨)
—மு. வரதராசன்

அவர் பார்வை எனக்கு மகிழ்ச்சிதான். அவர் செயலோ பிரியப் போகிறார் என்ற அச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறதே! (௲௱௫௰௨)
—சாலமன் பாப்பையா

முன்பெல்லாம் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல் தழுவிக் களிக்கும் போதுகூடப் பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது! (௲௱௫௰௨)
—மு. கருணாநிதி


அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.   (௲௱௫௰௩ - 1153) 

அறிவு உடையவரிடமும், தாம் காதலித்தவரைப் பிரிவது ஒரு சமயத்தில் உள்ளதனால், அவர், ‘பிரியேன்’ என்று சொன்ன சொல்லையும் என்னால் நம்ப முடியவில்லை! (௲௱௫௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது. (௲௱௫௰௩)
—மு. வரதராசன்

எல்லாம் அறியும் ஆற்றல் உடைய அவரும் ஒருநேரம் பிரிவார் என்றால், என்மீது அவர் கொண்டிருக்கும் அன்பை அறிந்து கொள்ள முடியவில்லை. (௲௱௫௰௩)
—சாலமன் பாப்பையா

பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்த செல்ல நேரிடுவதால்; ``பிரிந்திடேன்'' என அவர் கூறவதை உறுதி செய்திட இயலாது (௲௱௫௰௩)
—மு. கருணாநிதி


அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.   (௲௱௫௰௪ - 1154) 

அருள் செய்த காலத்தில், ‘அஞ்சாதே’ என்று கூறி, என் அச்சத்தைப் போக்கியவரே, இப்போது விட்டுப் பிரிவாரானால், அவரை நம்பிய நமக்கும் குற்றம் ஆகுமோ? (௲௱௫௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ. (௲௱௫௰௪)
—மு. வரதராசன்

என்னை மணந்தபோதே என்மீது அன்பு காட்டிப் பயப்படாதே, உன்னைப் பிரியமாட்டேன் என்று சொல்லி என்னைத் தேற்றிய அவர் சொல்லை, நான் நம்பியது தவறோ? (௲௱௫௰௪)
—சாலமன் பாப்பையா

பிரிந்திடேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப்பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியதில் என்ன குற்றமிருக்க முடியும்? (௲௱௫௰௪)
—மு. கருணாநிதி


ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.   (௲௱௫௰௫ - 1155) 

என்னைக் காப்பதானால், காதலர் பிரியாதபடி தடுத்துக் காப்பாயாக; அவர் பிரிந்து போய்விட்டார் என்றால், மீண்டும் அவரைக் கூடுதல் என்பது நமக்கு அரிதாகும் (௲௱௫௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது. (௲௱௫௰௫)
—மு. வரதராசன்

என் உயிரைக் காக்க எண்ணினால் அதைக் காப்பதற்கு உரிய அவர், என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப் பிரிந்தால் நான் இனி அவரைச் சேர்வது அரிது. (௲௱௫௰௫)
—சாலமன் பாப்பையா

காதலர் பிரிந்து சென்றால் மீண்டும் கூடுதல் எளிதல்ல என்பதால், அவர் பிரிந்து செல்லாமல் முதலியேயே காத்துக் கொள்ள வேண்டும் (௲௱௫௰௫)
—மு. கருணாநிதி


பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.   (௲௱௫௰௬ - 1156) 

‘பிரிவைப் பற்றிச் சொல்லும் கொடியவர் அவரானால்’, அவர் மீண்டும் திரும்பி வந்து நமக்கு இன்பம் தருவார் என்னும் நம் ஆசையும், பயன் இல்லாததே! (௲௱௫௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது. (௲௱௫௰௬)
—மு. வரதராசன்

நான் வேலையின் பொருட்டுப் பிரியப் போகிறேன் என்று அவரே என்னிடம் சொல்லும் அளவிற்குக் கொடியவர் என்றால், அவர் பிரிவைத் தாங்க முடியாத என் மீது அன்பு காட்டுவார் என்னும் என் எதிர்பார்ப்பு பயனற்றது. (௲௱௫௰௬)
—சாலமன் பாப்பையா

போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல் மனம் கொண்டவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண் (௲௱௫௰௬)
—மு. கருணாநிதி


துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.   (௲௱௫௰௭ - 1157) 

நம்மைத் தலைவன் பிரிந்து போயினான் என்பதை, மெலிந்த நம் முன்கையிலிருந்து கழலும் வளைகள், ஊரறிய எடுத்துக் காட்டித் தூற்ற மாட்டவோ? (௲௱௫௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ. (௲௱௫௰௭)
—மு. வரதராசன்

அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார் என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத் தெரிவிக்க மாட்டாவோ? (௲௱௫௰௭)
—சாலமன் பாப்பையா

என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே! (௲௱௫௰௭)
—மு. கருணாநிதி


இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.   (௲௱௫௰௮ - 1158) 

தோழியவர் எவருமே இல்லாத ஊரில் குடியிருப்பது மிகத் துன்பமானது; இனிய காதலரைப் பிரிந்து தனித்திருப்பது, அதை விட மிகவும் துன்பமானது (௲௱௫௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது. (௲௱௫௰௮)
—மு. வரதராசன்

உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை. (௲௱௫௰௮)
—சாலமன் பாப்பையா

நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது (௲௱௫௰௮)
—மு. கருணாநிதி


தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.   (௲௱௫௰௯ - 1159) 

தன்னைத் தொட்டால் சுடுவதல்லாமல், காமநோயைப் போலத் தன்னை அகன்று தொலைவில் விலகினால் சுடுவதற்குத் தீயும் ஆற்றல் உடையது ஆகுமோ! (௲௱௫௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ. (௲௱௫௰௯)
—மு. வரதராசன்

தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ? (௲௱௫௰௯)
—சாலமன் பாப்பையா

ஒருவரையொருவர் காணாமலும் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே! (௲௱௫௰௯)
—மு. கருணாநிதி


அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.   (௲௱௬௰ - 1160) 

காதலர் பிரிவைப் பொறுத்து, அதனால் வரும் நலிவையும் விலக்கி, பிரிவுத் துயரையும் தாங்கி, அதன் பின்னரும் உயிரோடு இருக்கும் மகளிர் உலகத்தில் பலர்! (௲௱௬௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு,( பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும், விட்டு பிரிந்த பின் பொருத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர். (௲௱௬௰)
—மு. வரதராசன்

சம்பாதிப்பதற்குக் கணவன் பிரிந்தால் அவன் பிரிவைத் தாங்கிக் கொண்டு, பிரிவுத் துன்பத்தையும், விட்டுவிட்டு, அரிய செயலாற்றி உயிர் வாழும் பெண்கள் பலர் இருக்கின்றனர். (௲௱௬௰)
—சாலமன் பாப்பையா

காதலர் பிரிந்து செல்வதற்கு ஒப்புதல் அளித்து, அதனால் ஏற்படும் துன்பத்தைப் போக்கிக் கொண்டு, பிரிந்த பின்னும் பொறுத்திருந்து உயிரோடு வாழ்பவர் பலர் இருக்கலாம்; ஆனால் நான்? (௲௱௬௰)
—மு. கருணாநிதி


Trending now

We @ Social Media