காமத்துப்பால் - கற்பியல் - படர்மெலிந்திரங்கல்
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும். (௲௱௬௰௧ - 1161)
பிரிவுத் துன்பமான இந்த நோயை, பிறர் அறியாதபடி மறைப்பேன்; ஆனால், அ·து ஊற்று நீரைப் போல மேன்மேலும் சுரந்து சுரந்து பெருகுகின்றதே (௲௱௬௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது. (௲௱௬௰௧)
—மு. வரதராசன்
என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக்கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது. (௲௱௬௰௧)
—சாலமன் பாப்பையா
இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும் (௲௱௬௰௧)
—மு. கருணாநிதி
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும். (௲௱௬௰௨ - 1162)
காமநோயை முழுவதும் மூடி மறைக்கவும் முடியவில்லை; நோயைச் செய்த காதலருக்குத் தூது அனுப்புவதும் என் பெண்ணைக்கு நாணம் தருகின்றதே! (௲௱௬௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது. (௲௱௬௰௨)
—மு. வரதராசன்
இந்தத் துன்பத்தை என்னால் மறைக்கவும் முடியவில்லை. துன்பத்தைத் தந்த இவருக்கு (எழுத்தில் தொலைபேசியில்) இதைச் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது. (௲௱௬௰௨)
—சாலமன் பாப்பையா
காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை (௲௱௬௰௨)
—மு. கருணாநிதி
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து. (௲௱௬௰௩ - 1163)
பிரிவுத் துயராலே நலியும் என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு, காமமும் நாணமும் இருபாலும் சம எடையாகத் தூங்குகின்றனவே? (௲௱௬௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன. (௲௱௬௰௩)
—மு. வரதராசன்
காதல் துன்பத்தையும், அவரிடம் சொல்ல முடியாமல் நான்படும் வெட்கத்ததையும் தாங்க முடியாத என் உடம்பில், என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு அதன் ஒரு புறத்தில் காதல் நோயும், மறுமுனையில் வெட்கமும் தொங்குகின்றன. (௲௱௬௰௩)
—சாலமன் பாப்பையா
பிரிவைத் தாங்கமுடியாது உயிர் துடிக்கும் என் உடலானது, ஒருபுறம் காதல் நோயும் மறுபுறம் அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு காவடி போல விளங்குகிறது (௲௱௬௰௩)
—மு. கருணாநிதி
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல். (௲௱௬௰௪ - 1164)
காமமாகிய நோயும் கடலைப் போலப் பெருகியுள்ளது; அதைக் கடக்கும் தோணியாகிய காதலர்தாம் இப்போது நம்மோடு உடனில்லாமற் போயினர்! (௲௱௬௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை. (௲௱௬௰௪)
—மு. வரதராசன்
காதல் துன்பம், வெட்கம், இவ்விரண்டிலும் என்னுள் மிகுந்திருப்பது காதல் துன்பம் என்னும் கடலே; அதைக் கடக்கப் பாதுகாப்பான படகுதான் இல்லை. (௲௱௬௰௪)
—சாலமன் பாப்பையா
காதல் கடல்போலச் சூழ்ந்துகொண்டு வருத்துகிறது ஆனால் அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை (௲௱௬௰௪)
—மு. கருணாநிதி
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர். (௲௱௬௰௫ - 1165)
இனிமையான நட்புடைய நம்மிடையே துன்பத்தைச் செய்யும் நம் காதலர், பகையை வெல்வதற்கான வலிமை வேண்டும் போது என்னதான் செய்வாரோ? (௲௱௬௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ? (௲௱௬௰௫)
—மு. வரதராசன்
இன்பம் தருவதற்குரிய நட்பிலேயே துன்பத்தைத் தரம் இவர், பகைமையில் என்னதான் செய்வாரோ? (௲௱௬௰௫)
—சாலமன் பாப்பையா
நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக்கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ? (௲௱௬௰௫)
—மு. கருணாநிதி
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது. (௲௱௬௰௬ - 1166)
காம இன்பமானது அநுபவிக்கும் போது கடலளவு பெரிதாயுள்ளது; ஆனால், பிரிவுத் துன்பத்தால் வருத்தும் போது, அவ்வருத்தம் கடலை விடப் பெரிதாக உள்ளதே! (௲௱௬௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது. (௲௱௬௰௬)
—மு. வரதராசன்
காதல் மகிழ்ச்சி கடல்போலப் பெரிது; ஆனால் பிரிவினால் அது துன்பம் செய்யத் தொடங்கிவிட்டால் அத்துன்பம் கடலைக் காட்டிலும் பெரிது. (௲௱௬௰௬)
—சாலமன் பாப்பையா
காதல் இன்பம் கடல் போன்றது காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது (௲௱௬௰௬)
—மு. கருணாநிதி
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன். (௲௱௬௰௭ - 1167)
காமமாகிய கடும்புனலை நீந்தி நீந்திக் கரை காணாமல் தவிக்கின்றேன்; இந்த நள்ளிரவிலும், யான் ஒருத்தியே தூங்காமல் வருந்தியபடி உள்ளேன்! (௲௱௬௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன். (௲௱௬௰௭)
—மு. வரதராசன்
காதல் துன்பமாகிய கடலை நீந்தியும் என்னால் கரை காண முடியவில்லை. நள்ளிரவுப் பொழுதினும் உறங்காமல் நான் தனியாகவே இருக்கிறேன். (௲௱௬௰௭)
—சாலமன் பாப்பையா
நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்; அதனால், காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன் (௲௱௬௰௭)
—மு. கருணாநிதி
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை. (௲௱௬௰௮ - 1168)
இந்த இராக்காலமும், எல்லா உயிர்களையும் உறங்கச் செய்துவிட்டு, என்னையன்றி யாரையும் இந்நள்ளிரவில் தனக்குத் துணையில்லாமல் உள்ளதே! (௲௱௬௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது. (௲௱௬௰௮)
—மு. வரதராசன்
பாவம் இந்த இரவு! இது எல்லா உயிர்களையும் தூங்கச் செய்துவிட்டுத் தனியாகவே இருக்கிறது. இதற்கு என்னைத் தவிர வேறு துணை இல்லை! (௲௱௬௰௮)
—சாலமன் பாப்பையா
`இரவே! உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நீ உறங்கச் செய்துவிட்டுப் பாவம் இப்போது என்னைத்தவிர வேறு துணையில்லாமல் இருக்கிறாய்.' (௲௱௬௰௮)
—மு. கருணாநிதி
கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா. (௲௱௬௰௯ - 1169)
பிரிவுத் துயராலே வருந்தும் போது மிக நீண்டது போலக் கழிகின்ற இரவுப் பொழுதானது, நம்மைப் பிரிந்து போன காதலரினும் மிகமிகக் கொடுமையானது (௲௱௬௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை. (௲௱௬௰௯)
—மு. வரதராசன்
இப்போதெல்லாம் இரவுகள் கழிவதற்கு நெடும்பொழுது ஆகிறது; என்னைப் பிரிந்து போன என் கணவரின் கொடுமையிலும் இவை மிகக் கொடுமையாக இருக்கின்றன. (௲௱௬௰௯)
—சாலமன் பாப்பையா
இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது (௲௱௬௰௯)
—மு. கருணாநிதி
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண். (௲௱௭௰ - 1170)
என் உள்ளத்தைப் போலவே, உடலும், அவர் இருக்கும் இடத்திற்கே இப்போதே செல்ல முடிந்ததானால், என் கண்கள் இப்படிக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்தாவே! (௲௱௭௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என் கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை. (௲௱௭௰)
—மு. வரதராசன்
என் மனம் போலவே என் கண்களும் என்னவர் இருக்கும் ஊருக்குச் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்தமாட்டா. (௲௱௭௰)
—சாலமன் பாப்பையா
காதலர் இருக்குமிடத்துக்கு என் நெஞ்சத்தைப் போலச் செல்ல முடியுமானால், என் கருவிழிகள், அவரைக் காண்பதற்குக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது (௲௱௭௰)
—மு. கருணாநிதி