திருக்குறள் - ஊடலுவகை

காமத்துப்பால் - கற்பியல் - ஊடலுவகை

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.   (௲௩௱௨௰௧ - 1321) 

அவரிடம் தவறு எதுவும் இல்லையானாலும், அவரோடு பிணங்குதல், அவர் நம்மீது மிகுதியாக அன்பு செலுத்தும்படி செய்வதற்கு வல்லது ஆகும் (௲௩௱௨௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது. (௲௩௱௨௰௧)
—மு. வரதராசன்

அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல். (௲௩௱௨௰௧)
—சாலமன் பாப்பையா

எந்த தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது (௲௩௱௨௰௧)
—மு. கருணாநிதி


ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.   (௲௩௱௨௰௨ - 1322) 

அவரோடு ஊடுதலாலே உண்டாகின்ற சிறு துன்பம், அந்தப் பொழுதிலே அவர் செய்யும் நல்ல அன்பை வாடுவதற்குச் செய்தாலும், பின்னர்ப் பெருமை பெறும் (௲௩௱௨௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும். (௲௩௱௨௰௨)
—மு. வரதராசன்

ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை பெறும். (௲௩௱௨௰௨)
—சாலமன் பாப்பையா

காதலரிடையே மலர்நதுள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும் (௲௩௱௨௰௨)
—மு. கருணாநிதி


புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.   (௲௩௱௨௰௩ - 1323) 

நிலத்தோடு நீர் பொருந்தினாற் போல நம்மோடு கலந்த அன்பு உடையவரான காதலருடன் ஊடுவதைக் காட்டிலும், தேவருலகத்து இன்பமும் சிறந்ததாகுமோ! (௲௩௱௨௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ. (௲௩௱௨௰௩)
—மு. வரதராசன்

நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு ஊடிப் பெறும் இன்பத்தைப் போலத் தேவர்கள் நாட்டு இன்பம் இருக்குமோ? (௲௩௱௨௰௩)
—சாலமன் பாப்பையா

நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா? (௲௩௱௨௰௩)
—மு. கருணாநிதி


புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.   (௲௩௱௨௰௪ - 1324) 

காதலரைத் தழுவி, விடாதேயிருக்கும் ஊடலினுள்ளே, என் உள்ளத்தின் வன்மையை உடைப்பதற்கு வலிமையான படையும் தோன்றுகின்றது (௲௩௱௨௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது. (௲௩௱௨௰௪)
—மு. வரதராசன்

என்னவரைத் தழுவிக் கொண்டு, விடாமல் இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்குமேலே சென்று என் உறுதியையும் உடைக்கும் ஆயுதம் இருக்கிறது. (௲௩௱௨௰௪)
—சாலமன் பாப்பையா

இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக் குலைக்கும் படைக்கலனும் இருக்கிறது (௲௩௱௨௰௪)
—மு. கருணாநிதி


தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.   (௲௩௱௨௰௫ - 1325) 

தவறு இல்லாதவரான போதும், தம்மால் காதலிக்கப்பட்ட மகளிரின் மென்மையான தோள்களை உடலால் நீங்கியிருக்கும் போது, உடலிலும் ஓர் இன்பம் உள்ளது (௲௩௱௨௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது. (௲௩௱௨௰௫)
—மு. வரதராசன்

ஆண்கள் மீது தவறு இல்லை என்றாலும் தவறு செய்தவராகவே நின்று, மனைவியால் ஊடப்பட்டு தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது, அந்த ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது. (௲௩௱௨௰௫)
—சாலமன் பாப்பையா

தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது (௲௩௱௨௰௫)
—மு. கருணாநிதி


உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.   (௲௩௱௨௰௬ - 1326) 

உண்பதைக் காட்டிலும் முன்னுண்டது செரித்தலே இன்பமாகும்; அதுபோலவே, காமத்தில் கூடிப்பெறும் இன்பத்தை விட ஊடிப்பெறும் இன்பமே சிறந்தது! (௲௩௱௨௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது. (௲௩௱௨௰௬)
—மு. வரதராசன்

உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது. (௲௩௱௨௰௬)
—சாலமன் பாப்பையா

உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம் அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம் (௲௩௱௨௰௬)
—மு. கருணாநிதி


ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.   (௲௩௱௨௰௭ - 1327) 

ஊடல் களத்திலே தோற்றவரே வெற்றி பெற்றவர்; அந்த உண்மையானது, ஊடல் தெளிந்தபின், அவர் கூடி மகிழும் தன்மையிலே தெளிவாகக் காணப்படும் (௲௩௱௨௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும். (௲௩௱௨௰௭)
—மு. வரதராசன்

ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றியைக் கூடிப் பெறும் இன்பத்தில் அறியலாம். (௲௩௱௨௰௭)
—சாலமன் பாப்பையா

ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார் இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது உணரப்படும் (௲௩௱௨௰௭)
—மு. கருணாநிதி


ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.   (௲௩௱௨௰௮ - 1328) 

நெற்றி வெயர்வு அரும்பும்படி காதலருடன் கூடும்போது உண்டாகும் இன்பத்தை, ஊடியிருந்து, அவர் உணர்த்த மீளவும் சேர்ந்து இன்புறும் போது பெறுவோமோ? (௲௩௱௨௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ. (௲௩௱௨௰௮)
—மு. வரதராசன்

நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா? (௲௩௱௨௰௮)
—சாலமன் பாப்பையா

நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா? (௲௩௱௨௰௮)
—மு. கருணாநிதி


ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.   (௲௩௱௨௰௯ - 1329) 

ஒள்ளிய இழையை உடையாள் இன்னும் ஊடுவாளாக! அதனைத் தணிவிக்கும் வகையிலே, யாம், அவளை இரந்து நிற்கும்படியாக, இராக்காலமும் இன்னும் நீள்வதாக! (௲௩௱௨௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக. (௲௩௱௨௰௯)
—மு. வரதராசன்

ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும். (௲௩௱௨௰௯)
—சாலமன் பாப்பையா

ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக (௲௩௱௨௰௯)
—மு. கருணாநிதி


ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.   (௲௩௱௩௰ - 1330) 

ஊடுதல் காமவாழ்விற்கே இன்பம் தருவதாகும்; காதலர் உணர்த்த உணர்ந்து கூடித் தழுவுதலையும் பெற்றால், அ·து, அதனினும் மிகுந்த இன்பமாகும் (௲௩௱௩௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும். (௲௩௱௩௰)
—மு. வரதராசன்

காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து ஊடலை நீக்கிக் கூடித் தழுவுதலே. (௲௩௱௩௰)
—சாலமன் பாப்பையா

ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும் எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான் (௲௩௱௩௰)
—மு. கருணாநிதி


Trending now

We @ Social Media