திருக்குறள் - பெருமை

பொருட்பால் - குடியியல் - பெருமை

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.   (௯௱௭௰௧ - 971) 

ஒருவனுக்குப் பெருமை, ‘பிறரால் செய்வதற்கரியதைச் செய்வேன்’ என்னும் மனவூக்கமே; இழிவாவது, ‘அதனைச் செய்யாமலே உயிர் வாழ்வேன்’ என்று நினைப்பதாகும் (௯௱௭௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம். (௯௱௭௰௧)
—மு. வரதராசன்

ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்ல செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே. (௯௱௭௰௧)
—சாலமன் பாப்பையா

ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும் ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும் (௯௱௭௰௧)
—மு. கருணாநிதி


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.   (௯௱௭௰௨ - 972) 

எல்லா மக்களுயிர்க்கும் பிறப்பியல்பு சமமானதே; தொழில் வேறுபாட்டால் பெருமை சிறுமை என்னும் சிறப்பியல்புகள் தாம் ஒரு போதும் ஒத்திருப்பதில்லை (௯௱௭௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை. (௯௱௭௰௨)
—மு. வரதராசன்

எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும். (௯௱௭௰௨)
—சாலமன் பாப்பையா

பிறப்பினால் அனைவரும் சமம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும் (௯௱௭௰௨)
—மு. கருணாநிதி


மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.   (௯௱௭௰௩ - 973) 

செயற்கரிய செய்யாத சிறியவர் உயர்ந்த ஆசனங்களிலே வீற்றிருந்தாலும் பெரியவர் ஆகார்; அச்செயல்களைச் செய்த பெருமையினர் தரையில் நின்றாலும் சிறியவராகார் (௯௱௭௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர். (௯௱௭௰௩)
—மு. வரதராசன்

நல்ல பண்புகள் ( பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர். (௯௱௭௰௩)
—சாலமன் பாப்பையா

பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள் (௯௱௭௰௩)
—மு. கருணாநிதி


ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.   (௯௱௭௰௪ - 974) 

கவராத மனத்தையுடைய மகளிர், நிறையிலே வழுவாமல் தம்மைத் தாமே காத்து ஒழுகுதலைப் போல, பெருமையும், தன்னைத்தான் காப்பவனிடமே உளதாகும் (௯௱௭௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும். (௯௱௭௰௪)
—மு. வரதராசன்

தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு. (௯௱௭௰௪)
—சாலமன் பாப்பையா

தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும் (௯௱௭௰௪)
—மு. கருணாநிதி


பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.   (௯௱௭௰௫ - 975) 

பெருமை உடையவர்கள், தாம் வறுமையான போதும், பிறரால் செய்வதற்கு அருமையான தம் செயல்களை விடாமல் செய்து முடிக்கும் வலிமை கொண்டவராவர் (௯௱௭௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர். (௯௱௭௰௫)
—மு. வரதராசன்

எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர். (௯௱௭௰௫)
—சாலமன் பாப்பையா

அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள் (௯௱௭௰௫)
—மு. கருணாநிதி


சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.   (௯௱௭௰௬ - 976) 

‘இத்தகையவரான பெரியோரை வழிபட்டு அவரியல்பை நாமும் அடைவோம்’ என்னும் நல்ல நோக்கம், மற்றைச் சிறியார் மனத்தில் ஒரு போதும் உண்டாகாது (௯௱௭௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை. (௯௱௭௰௬)
—மு. வரதராசன்

பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது. (௯௱௭௰௬)
—சாலமன் பாப்பையா

பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை (௯௱௭௰௬)
—மு. கருணாநிதி


இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.   (௯௱௭௰௭ - 977) 

தகுதியான பெரியாரிடம் அமைந்திருக்கும் சிறப்பு, பொருந்தாத சிரியவர்களிடத்தேயும் சேருமானால், தகுதியை விட்டுத் தருக்கினிடத்தே அவரைச் செல்லச் செய்யும் (௯௱௭௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும். (௯௱௭௰௭)
—மு. வரதராசன்

பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம். (௯௱௭௰௭)
—சாலமன் பாப்பையா

சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை (௯௱௭௰௭)
—மு. கருணாநிதி


பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.   (௯௱௭௰௮ - 978) 

பெருமை உடையவர் தருக்கியிராமல் பணிவாகவே நடந்து வருவார்கள்; மற்றைச் சிறுமை உடையவரோ எப்போது தம்மை வியந்து புனைந்து பேசி வருவார்கள் (௯௱௭௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும். (௯௱௭௰௮)
—மு. வரதராசன்

பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர். (௯௱௭௰௮)
—சாலமன் பாப்பையா

பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள் (௯௱௭௰௮)
—மு. கருணாநிதி


பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.   (௯௱௭௰௯ - 979) 

பெருமை குணம் ஆவது, காரணம் உள்ள போதும் தருக்கின்றி அமைந்திருத்தல்; சிறுமைக்குணமாவது பெருமை அற்ற போதும் தருக்கி, முடிவில் நின்றுவிடலாகும் (௯௱௭௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும். (௯௱௭௰௯)
—மு. வரதராசன்

பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா‌மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை. (௯௱௭௰௯)
—சாலமன் பாப்பையா

ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும் ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும் (௯௱௭௰௯)
—மு. கருணாநிதி


அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.   (௯௱௮௰ - 980) 

பெருமை உடையவர், பிறரது மானத்தைப் பேசி, அவமானத்தை மறைப்பார்கள்; சிறுமை உடையவரோ, பிறரது குணத்தை மறைத்து, குற்றத்தையே கூறுவார்கள் (௯௱௮௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும் (௯௱௮௰)
—மு. வரதராசன்

பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்‌களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர். (௯௱௮௰)
—சாலமன் பாப்பையா

பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும் பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும் (௯௱௮௰)
—மு. கருணாநிதி


Trending now

We @ Social Media