திருக்குறள் - அன்புடைமை

அறத்துப்பால் - இல்லறவியல் - அன்புடைமை

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.   (௭௰௧ - 71) 

அன்புக்கு அடைத்து வைக்கும் தாழ் எதுவும் உண்டோ? அன்புடையாரின் சிறு கண்ணீரே அவர் அன்பினைப் பலர் அறிய வெளிப்படுத்திவிடும் (௭௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும் (௭௰௧)
—மு. வரதராசன்

அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும். (௭௰௧)
—சாலமன் பாப்பையா

உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும் (௭௰௧)
—மு. கருணாநிதி


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.   (௭௰௨ - 72) 

அன்பில்லாதவர் எல்லாமே தமக்கு உரிமை என்று நினைப்பர்; அன்பு உடையவரோ தம் எலும்பையும் பிறருக்கு உரியதாக்கி மகிழ்வர் (௭௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர் (௭௰௨)
—மு. வரதராசன்

அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர் (௭௰௨)
—சாலமன் பாப்பையா

அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர் (௭௰௨)
—மு. கருணாநிதி


அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.   (௭௰௩ - 73) 

அருமையான உயிருக்கு உடம்போடு பொருந்திய தொடர்பானது, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கைக்காகவே என்பர் சான்றோர் (௭௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர். (௭௰௩)
—மு. வரதராசன்

பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர் (௭௰௩)
—சாலமன் பாப்பையா

உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும் (௭௰௩)
—மு. கருணாநிதி


அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.   (௭௰௪ - 74) 

அன்பானது பிறர்பால் ஆர்வம் உடையவராகும் பண்பைத் தரும் (௭௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும் (௭௰௪)
—மு. வரதராசன்

குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும் (௭௰௪)
—சாலமன் பாப்பையா

அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும் (௭௰௪)
—மு. கருணாநிதி


அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.   (௭௰௫ - 75) 

இவ்வுலகத்திலே இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு, அவர் அன்புடையவராகப் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயனே என்பர் (௭௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர் (௭௰௫)
—மு. வரதராசன்

இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர் (௭௰௫)
—சாலமன் பாப்பையா

உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம் (௭௰௫)
—மு. கருணாநிதி


அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.   (௭௰௬ - 76) 

அறத்திற்கே அன்பு துணையாகும் என்று சொல்பவர் அறியாதவர்; ஆராய்ந்தால் மறச்செய்கைகளுக்கும் அன்பே துணையாயிருக்கும் (௭௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது (௭௰௬)
—மு. வரதராசன்

அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும். (௭௰௬)
—சாலமன் பாப்பையா

வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள் (௭௰௬)
—மு. கருணாநிதி


என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.   (௭௰௭ - 77) 

எலும்பில்லாத புழுப்பூச்சிகளை வெயில் காய்ந்து வருத்துவது போல, அன்பில்லாதவனை அறமானது காய்ந்து வருந்தச் செய்யும் (௭௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும். (௭௰௭)
—மு. வரதராசன்

எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும். (௭௰௭)
—சாலமன் பாப்பையா

அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும் அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும் (௭௰௭)
—மு. கருணாநிதி


அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.   (௭௰௮ - 78) 

உள்ளத்திலே அன்பு இல்லாதவருடைய இல்வாழ்க்கையானது, வன்மையான பாலை நிலத்திலே காய்ந்த மரம் தளிர்த்தாற் போல நிலையற்றதாம் (௭௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது. (௭௰௮)
—மு. வரதராசன்

மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம். (௭௰௮)
—சாலமன் பாப்பையா

மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது (௭௰௮)
—மு. கருணாநிதி


புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.   (௭௰௯ - 79) 

உள்ளத்தின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவருக்கு, கண்ணுக்குத் தெரியும் உடம்பின் பிற உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும்? (௭௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும். (௭௰௯)
—மு. வரதராசன்

குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள், ஏவல் என்பன என்ன பயனைத் தரும்? (௭௰௯)
—சாலமன் பாப்பையா

அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்? (௭௰௯)
—மு. கருணாநிதி


அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.   (௮௰ - 80) 

உயிர்நிலை என்பது அன்பின் வழியாக அமைந்ததே; அஃது இல்லாதவருக்கு எலும்பைத் தோலால் போர்த்த உடம்பு மட்டுமேயாகும் (௮௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும் (௮௰)
—மு. வரதராசன்

அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும் (௮௰)
—சாலமன் பாப்பையா

அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும் (௮௰)
—மு. கருணாநிதி


Trending now

We @ Social Media