திருக்குறள் - புணர்ச்சி மகிழ்தல்

காமத்துப்பால் - களவியல் - புணர்ச்சி மகிழ்தல்

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.   (௲௱௧ - 1101) 

கண்டும் கேட்டும் உண்டும் மோந்தும் தீண்டியும் அறிகின்ற ஐம்புல இன்பங்களும், ஒளிவீசும் வளையல் அணிந்த இவள் ஒருத்தியிடத்திலேயே அமைந்துள்ளனவே! (௲௱௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன. (௲௱௧)
—மு. வரதராசன்

விழியால் பார்த்து, செவியால்கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு. (௲௱௧)
—சாலமன் பாப்பையா

வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம்; கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு மகிழவும், முகர்ந்துண்டு மகிழவுமான ஐம்புல இன்பங்களும் நிறைந்துள்ளன (௲௱௧)
—மு. கருணாநிதி


பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.   (௲௱௨ - 1102) 

நோய்க்கு மருந்தாக அமைவன வேறான பொருள்கள்; அவ்வாறு இல்லாமல், அணிபுனைந்த இவளால் நமக்கு வந்த நோய்க்கு, இவள், தானே மருந்தும் ஆயினளே! (௲௱௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள். (௲௱௨)
—மு. வரதராசன்

நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து. (௲௱௨)
—சாலமன் பாப்பையா

நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள் (௲௱௨)
—மு. கருணாநிதி


தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.   (௲௱௩ - 1103) 

தாம் விரும்பும் மகளிரின் மென்மையான தோள்மேல் துயிலும் இன்பத்தைப் போலத் தாமரைக் கண்ணானின் போக உலகத்து இன்பமும் இனிதாக இருக்குமோ? (௲௱௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ. (௲௱௩)
—மு. வரதராசன்

தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ? (௲௱௩)
—சாலமன் பாப்பையா

தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா? (௲௱௩)
—மு. கருணாநிதி


நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.   (௲௱௪ - 1104) 

தன்னை விட்டு விலகிச் சென்றால் சுடுதலும், அருகில் நெருங்கினால் குளிர்தலுமாகிய நெருப்பை, இவள் தான், எவ்விடத்திலிருந்து பெற்றுள்ளாளோ? (௲௱௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள். (௲௱௪)
—மு. வரதராசன்

தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்? (௲௱௪)
—சாலமன் பாப்பையா

நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக் கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள் (௲௱௪)
—மு. கருணாநிதி


வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.   (௲௱௫ - 1105) 

விரும்பியபொழுது அவையவை தரும் இன்பத்தைப் போல இன்பம் தருவன, மலரணிந்த கூந்தலை உடையவளான இவள் தோள்கள் தருகின்ற இன்பம்! (௲௱௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன. (௲௱௫)
—மு. வரதராசன்

நாம் விரும்பும் பொருள்கள் விரும்பியபொழுது விரும்பியவாறே இன்பம் தருவது போல, பூச்சூடிய கூந்தலை உடைய இவள் தோள்கள் இவளுடன் எப்போது கூடினாலும் இன்பம் தருகின்றன. (௲௱௫)
—சாலமன் பாப்பையா

விருப்பமான பொருள் ஒன்று, விரும்பிய பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த பூவையின் தோள்கள் இன்பம் வழங்குகின்றன (௲௱௫)
—மு. கருணாநிதி


உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.   (௲௱௬ - 1106) 

அணைக்கும் போதெல்லாம், வாடிய என்னுயிர் தளிர்க்குமாறு தீண்டுதலால், இப் பேதையின் தோள்கள் அமிழ்தத்தால் அமைந்தவை போலும்! (௲௱௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும். (௲௱௬)
—மு. வரதராசன்

இவளை அணைக்கும்போது எல்லாம் வாடிக் கிடந்த என் உயிர் தளிர்க்கும்படி என்னைத் தொடுவதால், இவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவை போலும். (௲௱௬)
—சாலமன் பாப்பையா

இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கு இவளின் அழகிய தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவை என்பதுதான் காரணம் போலும் (௲௱௬)
—மு. கருணாநிதி


தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.   (௲௱௭ - 1107) 

தம் வீட்டிலிருந்து, தமக்குள்ள பகுதியை உண்ணும் இனிமை போன்றது, அழகிய மாமை நிறம் உடையவளான இவளைத் தழுவிப் பெறுகின்ற இன்பம்! (௲௱௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுந்து கொடுத்து உண்டாற் போன்றது. (௲௱௭)
—மு. வரதராசன்

அழகிய மா நிறப் பெண்ணாகிய என் மனைவியிடம் கூடிப் பெறும் சுகம், தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் சுகம் போன்றது. (௲௱௭)
—சாலமன் பாப்பையா

தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது (௲௱௭)
—மு. கருணாநிதி


வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.   (௲௱௮ - 1108) 

காற்றும் இடையிலே புகுந்து பிளந்துவிடாத இறுக்கமான தழுவுதல், விரும்பிக் கூடும் இருவருக்கும் இனிமைதரும் நல்ல இன்ப உறவாகும்! (௲௱௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும். (௲௱௮)
—மு. வரதராசன்

இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே. (௲௱௮)
—சாலமன் பாப்பையா

காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும் (௲௱௮)
—மு. கருணாநிதி


ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.   (௲௱௯ - 1109) 

ஊடலும், அதனை அளவோடு அறிந்து தெளிவித்தலும், பின்னர்க் கூடுதலும், என்னும் இவை எல்லாம், காமம் பொருந்தியவர் தமக்குள் பெற்ற பயன்களாகும் (௲௱௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும். (௲௱௯)
—மு. வரதராசன்

படுக்கைக்குப் போகுமுன் சிறு ஊடல் செய்தல், தவறு உணர்ந்து சமாதானம் ஆதல், அதன்பின் கூடல் இவை அல்லவா திருமணம் செய்து கொண்டவர் பெற்ற பயன்கள்! (௲௱௯)
—சாலமன் பாப்பையா

ஊடல் கொள்வதும், அதனால் விளையும் இன்பம் போதுமென உணர்ந்து அதற்கும் மேலான இன்பம் காணப் புணர்ந்து மயங்குவதும் காதல் வாழ்வினர் பெற்றிடும் பயன்களாகும் (௲௱௯)
—மு. கருணாநிதி


அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.   (௲௱௰ - 1110) 

ஒன்றை அறியும் போது, முன்னிருந்த அறியாமையைக் கண்டாற் போல, செறிவான சிவந்த அணிகளை உடையவளைச் சேருந்தோறும், காம இன்பமும் உண்டாகின்றது! (௲௱௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது. (௲௱௰)
—மு. வரதராசன்

நூல்களாலும் நுண் அறிவாலும் அறிய அறிய முன்னைய நம் அறியாமை தெரிவதுபோல, நல்ல அணிகளை அணிந்திருக்கும் என் மனைவியுடன் கூடக் கூட அவள் மீது உள்ள என் காதற்சுவையும் புதிது புதிதாகத் தெரிகிறது. (௲௱௰)
—சாலமன் பாப்பையா

மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் இருக்கிறது (௲௱௰)
—மு. கருணாநிதி


Trending now

We @ Social Media