திருக்குறள் - கண்விதுப்பழிதல்

காமத்துப்பால் - கற்பியல் - கண்விதுப்பழிதல்

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.   (௲௱௭௰௧ - 1171) 

இக்கண்கள் அவரைக் காட்டியதால் அல்லவோ நீங்காத இக் காமநோயை யாமும் பெற்றோம்; அவை, இன்று என்னிடம் காட்டச் சொல்லி அழுவது எதனாலோ? (௲௱௭௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்? (௲௱௭௰௧)
—மு. வரதராசன்

தணியாத காதல் துன்பத்தை நான் அறிந்ததே இந்தக் கண்கள் எனக்கு அவரைக் காட்டியதால்தானே? இப்போது அவரைக் காட்டு என என்னிடம் அழுவது எதற்கு? (௲௱௭௰௧)
—சாலமன் பாப்பையா

கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்? (௲௱௭௰௧)
—மு. கருணாநிதி


தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.   (௲௱௭௰௨ - 1172) 

மேல்விளைவு பற்றி ஆராயாமல், அன்று அவரை நோக்கி மகிழ்ந்த கண்கள், இன்று, என் துயரைப் பகுத்து உணராமல், தாமும் துன்பப்படுவதுதான் எதனாலோ? (௲௱௭௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்? (௲௱௭௰௨)
—மு. வரதராசன்

வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக? (௲௱௭௰௨)
—சாலமன் பாப்பையா

விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்? (௲௱௭௰௨)
—மு. கருணாநிதி


கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.   (௲௱௭௰௩ - 1173) 

அன்று, தாமே விரைந்து பார்த்தும், இன்று தாமே அழுகின்ற கண்கள், நம்மால் அதன் அறியாமை கருதிச் சிரிக்கத் தகுந்த இயல்பினையே உடையதாகும் (௲௱௭௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது. (௲௱௭௰௩)
—மு. வரதராசன்

அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. (௲௱௭௰௩)
—சாலமன் பாப்பையா

தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன இது நகைக்கத்தக்க ஒன்றாகும் (௲௱௭௰௩)
—மு. கருணாநிதி


பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.   (௲௱௭௰௪ - 1174) 

அன்று, யான் உய்யாத அளவு தீராத காமநோயை என்னிடம் நிறுத்திய கண்கள், இன்று, தாமும் அழுவதற்கு மாட்டாதபடி நீர்வற்றி வறண்டு விட்டனவே! (௲௱௭௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன. (௲௱௭௰௪)
—மு. வரதராசன்

மை தீட்டப்பட்ட இந்தக் கண்கள் நான் தப்பிக்கவும், வாழவும் முடியாத காதல் துன்பத்தை எனக்குத் தந்துவிட்டுத் தாமும் அழ முடியாமல் நீர் வற்றிப் போய்விட்டன. (௲௱௭௰௪)
—சாலமன் பாப்பையா

தப்பிப் பிழைக்க முடியாத, தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன (௲௱௭௰௪)
—மு. கருணாநிதி


படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.   (௲௱௭௰௫ - 1175) 

கடலிலும் பெரிதான காமநோயை அன்று எனக்குச் செய்த இக் கண்கள், அத் தீவினையால், தாமும் உறங்காமல் இவ்விரவுப் பொழுதில் துன்பத்தை அடைகின்றன (௲௱௭௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன. (௲௱௭௰௫)
—மு. வரதராசன்

கடலைவிடப் பெரிதாகும் காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. (௲௱௭௰௫)
—சாலமன் பாப்பையா

கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன (௲௱௭௰௫)
—மு. கருணாநிதி


ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.   (௲௱௭௰௬ - 1176) 

எமக்கு இத்தகைய காமநோயைச் செய்த கண்கள், தாமும் துயில் பெறாமல் இப்படி அழுகையில் ஈடுபட்டது, காண்பதற்கு மிகவும் இனியதாகும் (௲௱௭௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே! (௲௱௭௰௬)
—மு. வரதராசன்

எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது. (௲௱௭௰௬)
—சாலமன் பாப்பையா

ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே! (௲௱௭௰௬)
—மு. கருணாநிதி


உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.   (௲௱௭௰௭ - 1177) 

விரும்பி உள் நெகிழ்ந்துவிடாதே, அன்று அவரைக் கண்டு மகிழ்ந்த கண்கள், இன்று துயிலாது வருந்தி வருந்தித் தம்மிடமுள்ள நீரும் அற்றே போவதாக! (௲௱௭௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும். (௲௱௭௰௭)
—மு. வரதராசன்

விரும்பி மகிழ்ந்து விடாமல் அன்று அவரைக் கண்ட கண்களின் உள் இருக்கும் கண்ணீர் எல்லாம் இன்று வருந்தி வருந்தி வற்றிப் போகட்டும்! (௲௱௭௰௭)
—சாலமன் பாப்பையா

அன்று, இழைந்து குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே! இன்று பிரிந்து சென்றுள்ள அவரை நினைத்துக் தூங்காமலும், துளிக் கண்ணீரும் அற்றுப்போகும் நிலையிலும் துன்பப்படுங்கள் (௲௱௭௰௭)
—மு. கருணாநிதி


பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.   (௲௱௭௰௮ - 1178) 

உள்ளத்தில் விருப்பமில்லாமல், பேச்சால் அன்பு காட்டியவர் இவ்விடத்தே உள்ளனர்; அதனால் என்ன பயன்? அவரைக் காணாமல் என் கண்கள் அமைகின்றிலவே! (௲௱௭௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை. (௲௱௭௰௮)
—மு. வரதராசன்

உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.! (௲௱௭௰௮)
—சாலமன் பாப்பையா

என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே! (௲௱௭௰௮)
—மு. கருணாநிதி


வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.   (௲௱௭௰௯ - 1179) 

காதலர் வராத போது, அவர் வரவை எதிர்பார்த்துத் தூங்கா; வந்த போது, பிரிவஞ்சித் துயிலா; இருவழியும் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தையே அடைந்தன! (௲௱௭௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கி‌டையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன. (௲௱௭௰௯)
—மு. வரதராசன்

அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான். (௲௱௭௰௯)
—சாலமன் பாப்பையா

இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்துவிட்டாலும் பிறகு தூங்குவதில்லை இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும் (௲௱௭௰௯)
—மு. கருணாநிதி


மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.   (௲௱௮௰ - 1180) 

எம்மைப் போல் அறைபறையாகிய கண்களை உடையவரின், நெஞ்சில் அடக்கியுள்ள மறையை அறிதல், இவ்வூரிலே உள்ளவர்க்கு மிகவும் எளியதாகும் (௲௱௮௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று. (௲௱௮௰)
—மு. வரதராசன்

அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது. (௲௱௮௰)
—சாலமன் பாப்பையா

காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல (௲௱௮௰)
—மு. கருணாநிதி


Trending now

We @ Social Media