பொருட்பால் - நட்பியல் - பெண்வழிச்சேரல்
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது. (௯௱௧ - 901)
தன் மனையாள் விரும்புகிறபடியே வாழ்கின்றவர், சிறந்த அறப்பயன்களையும் அடையார்; பொருள் செய்தலுக்கு முற்படுகின்றவர் இகழ்ந்து ஒதுங்கும் பொருளும் அதுவே (௯௱௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே. (௯௱௧)
—மு. வரதராசன்
மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது. (௯௱௧)
—சாலமன் பாப்பையா
கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள் (௯௱௧)
—மு. கருணாநிதி
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும். (௯௱௨ - 902)
தன் ஆண்மையைப் பேணாது, மனையாளது பெண்மையையே விரும்புகிறவன் செல்வம், இவ்வுலகத்து ஆண்பாலர்க்குப் பெரியதோர் நாணமாக வெட்கம் தரும் (௯௱௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும். (௯௱௨)
—மு. வரதராசன்
தன் ஆண்மையை எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும். (௯௱௨)
—சாலமன் பாப்பையா
எற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும் (௯௱௨)
—மு. கருணாநிதி
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும். (௯௱௩ - 903)
தன் இல்லாளிடத்தே தாழ்ந்து போவதற்கு ஏதுவான ஒருவனது அச்சம், அ·து இல்லாத நல்லோர்களிடையே செல்லும் காலத்தில், எப்போதும் நாணத்தையே தரும் (௯௱௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும். (௯௱௩)
—மு. வரதராசன்
மனைவியிடம் பணிந்து போகும் பயம் ஒருவனிடம் இருந்தால், இது இல்லாத நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும். (௯௱௩)
—சாலமன் பாப்பையா
நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும் (௯௱௩)
—மு. கருணாநிதி
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று. (௯௱௪ - 904)
தன் மனையாளுக்கு அஞ்சி வாழும் மறுமைப்பயனை இல்லாத ஒருவனுக்கு, செயலைச் செய்யும் செயலாண்மை இருந்த போதிலும், அது நல்லோரால் மதிக்கப் படாது (௯௱௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை. (௯௱௪)
—மு. வரதராசன்
தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது. (௯௱௪)
—சாலமன் பாப்பையா
மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை (௯௱௪)
—மு. கருணாநிதி
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல். (௯௱௫ - 905)
தன் மனையாளுக்கு எப்போதும் அஞ்சுகின்றவன், தான் தேடிய பொருளேயானாலும், அதனால் நல்லவர்களுக்கு நல்ல செயல் செய்வதற்கும் அச்சங் கொள்வான் (௯௱௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான். (௯௱௫)
—மு. வரதராசன்
தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான். (௯௱௫)
—சாலமன் பாப்பையா
எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான் (௯௱௫)
—மு. கருணாநிதி
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர். (௯௱௬ - 906)
தன் இல்லாளின் மூங்கில் போன்ற தோளைக் கண்டதும் அஞ்சுகிறவர்கள், வீரத்தால் சுவர்க்கம் பெற்ற அமரரைப் போல வாழ்ந்தாரானாலும், ஆண்மையற்றவரே (௯௱௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர். (௯௱௬)
—மு. வரதராசன்
தேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே. (௯௱௬)
—சாலமன் பாப்பையா
அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது (௯௱௬)
—மு. கருணாநிதி
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து. (௯௱௭ - 907)
தன் இல்லாள் ஏவியபடியே செய்து திரிகின்ற ஒருவனது ஆண் தன்மையைக் காட்டிலும், நாணத்தையுடைய அவளது பெண் தன்மையே மேலானதாகும் (௯௱௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது. (௯௱௭)
—மு. வரதராசன்
மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது. (௯௱௭)
—சாலமன் பாப்பையா
ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும் (௯௱௭)
—மு. கருணாநிதி
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர். (௯௱௮ - 908)
தம் மனையாள் விரும்பிய படியே நடப்பவர்கள், தம்முடைய நண்பர்களின் குறைகளைத் தீர்க்கமாட்டார்கள்; மறுமைக்கு உதவும் எந்த அறத்தையுமே செய்ய மாட்டார்கள் (௯௱௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார். (௯௱௮)
—மு. வரதராசன்
தம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார். (௯௱௮)
—சாலமன் பாப்பையா
ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள் (௯௱௮)
—மு. கருணாநிதி
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல். (௯௱௯ - 909)
அறச்செயலும், அது முடிப்பதற்கு ஏதுவான பொருளைச் செய்தலும், பிறவான இன்பச் செயல்களும், தம் மனையாள் ஏவலைச் செய்வாரிடத்தில் உள்ளனவாகா (௯௱௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை. (௯௱௯)
—மு. வரதராசன்
அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா. (௯௱௯)
—சாலமன் பாப்பையா
ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது (௯௱௯)
—மு. கருணாநிதி
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல். (௯௱௰ - 910)
கருமச் சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சமும், அதனால் ஆகிய செல்வமும் உடைய வேந்தர்க்கு, மனையாளைச் சேர்ந்து நடப்பதனால் உண்டாகும் பேதைமை உண்டாகாது (௯௱௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை. (௯௱௰)
—மு. வரதராசன்
சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது. (௯௱௰)
—சாலமன் பாப்பையா
சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள் (௯௱௰)
—மு. கருணாநிதி